» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீனாவில் செயற்கைக்கோள் அனுப்பியபோது குடியிருப்பு பகுதியில் விழுந்த ராக்கெட்!
திங்கள் 24, ஜூன் 2024 8:20:16 AM (IST)
சீனாவில் செயற்கைக்கோள் அனுப்பியபோது குடியிருப்பு பகுதியில் ராக்கெட்டின் ஒரு பகுதி விழுந்து நொறுங்கியது. இதனால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதில் உலக நாடுகள் பலவும் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்தவகையில் காமா-கதிர் வெடிப்பு உள்பட பல்வேறு வானியல் நிகழ்வுகளை ஆராய்வதற்காக சீனா ஒரு செயற்கைக்கோளை உருவாக்கியது. இது பிரான்ஸ் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ஆகும். இதற்கு ஸ்பேஸ் வேரியபிள் ஆப்ஜெக்ட்ஸ் மானிட்டர் என்று பெயரிடப்பட்டது.
இதனையடுத்து சீனாவின் ஜிசாங் ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோளை ஏவுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் லாங் மார்ச்-2சி என்ற ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது. ஆனால் அனுப்பப்பட்ட சிறிது நேரத்திலேயே ராக்கெட்டின் ஒரு பகுதி வெடித்து சிதறி குடியிருப்பு பகுதியில் விழுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் சாலையில் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்த காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாக லாங் மார்ச்-2சி வகை ராக்கெட்டில் எரிபொருளாக நைட்ரஜன் டெட்ராக்சைடு, டைமெதில் ஹைட்ராசின் ஆகிய வாயுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. கொடிய நச்சுத்தன்மையுள்ள இந்த வாயுக்கள் மனிதர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. எனினும் ஆள் நடமாட்டம் குறைவான பகுதியில் விழுந்ததால் இதனால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், `ராக்கெட்டில் இருந்து வெடித்து சிதறும் பாகங்கள் கடலுக்குள் விழும் வகையில் திட்டமிடப்பட்டு இருக்கும். ஆனால் இந்த ராக்கெட்டின் பாகம் வெடித்து சிதறி துரதிர்ஷ்டவசமாக குடியிருப்பு பகுதியில் விழுந்து உள்ளது' என தெரிவித்தனர். அதேசமயம் இந்த செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.