» செய்திகள் - விளையாட்டு » உலகம்
காஸாவில் செஞ்சிலுவைச் சங்கக் கட்டடம் மீது ஏவுகணைத் தாக்குதல்: 22 பேர் பலி!
சனி 22, ஜூன் 2024 4:59:17 PM (IST)
காஸாவில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்கள் மீது ஏவுகணைத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐசிஆர்சி தெரிவித்துள்ளது..
காஸாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்களை குறிவைத்து நேற்று ஜூன் 21) நடத்தப்பட்டுள்ள ஏவுகணைத் தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்த கோர தாக்குதல்களில் 45 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்(ஐசிஆர்சி) தெரிவித்துள்ளது.
ரஃபா நகரத்திலிருந்து இடம்பெயர்ந்த பாலஸ்தீன மக்கள், காஸாவில் தஞ்சமடைந்திருந்த தற்காலிக முகாம்கள் மீதும் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும், அதிலும் குறிப்பாக, காஸாவில் அல் மாவாஸி பகுதியில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்களை சுற்றியுள்ள பகுதிகளில் தார்ப்பாய்களால் அமைக்கப்பட்டுள்ள பாலச்தீன மக்களின் தற்காலிக உறைவிடங்கள் குறிவைத்து குண்டுவீசி தகர்க்கப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களில் 25 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 50 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஹமாஸ் அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வரும் பாலஸ்தீன சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் இந்த தாக்குதல்களை நிகழ்த்தியிருப்பதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், இந்த தாக்குதல்களுக்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என இஸ்ரேல் தரப்பு அறிவித்துள்ளது.