» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சித்தூர் அருகே கோர விபத்து: லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!
வியாழன் 5, மார்ச் 2026 8:36:13 AM (IST)
பெங்களூருவில் இருந்து திருப்பதிக்குச் சென்ற கார், சித்தூர் அருகே லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு ராஜாஜி நகரைச் சேர்ந்தவர்கள் மோகன்தாஸ் (71), நாகராஜா ராவ் (61), குசுமா (61), ஜெயந்தி (59) மற்றும் பூஜா (33). ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் ஐந்து பேரும் நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து திருப்பதிக்கு காரில் புறப்பட்டனர்.
ஆந்திர மாநிலம், பலமனேர் பகுதியில் உள்ள கங்காவரம் பைபாஸ் சாலையில் இன்று காலை 8 மணியளவில் கார் சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில், பெங்களூருவில் சிமெண்ட் பாரம் இறக்கிவிட்டு ஒரு லாரி நெல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் கார் பலமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுமையாக லாரியின் அடியில் சிக்கி உருக்குலைந்தது. காரில் இருந்த 5 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
சத்தம் கேட்டு லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் வந்து பார்த்தபோது, விபத்தின் தீவிரம் தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த கங்காவரம் மற்றும் பலமனேர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் காரின் இடிபாடுகள் அகற்றப்பட்டு, பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. பின்னர், உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக பலமனேர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த விபத்து குறித்து கங்காவரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபத்தில் பலியான சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுகவின் நோக்கம் அரசியல் ஆதாயம் மட்டுமே - முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:45:09 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம்: ராகுல் புறக்கணிப்பு? திமுக கூட்டணியில் சலசலப்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:32:03 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை!
சனி 11, ஏப்ரல் 2026 4:54:44 PM (IST)

உத்தரப் பிரதேசத்தில் பெருந்துயரம்: படகு கவிழ்ந்து பஞ்சாப் சுற்றுலா பயணிகள் 10 பேர் பலி!
சனி 11, ஏப்ரல் 2026 3:59:52 PM (IST)

மும்பை விமான நிலையத்தில் 29 கிலோ தங்கம் பறிமுதல்: 24 வெளிநாட்டுப் பெண்கள் கைது!
சனி 11, ஏப்ரல் 2026 3:55:43 PM (IST)

கட்டுக்கட்டாகப் பணம் எரிந்த விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா திடீர் ராஜினாமா!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:23:06 PM (IST)







