» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நீட் தேர்வெழுதிய 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: கார்கே குற்றச்சாட்டு
வியாழன் 13, ஜூன் 2024 5:13:39 PM (IST)
நீட் தேர்வெழுதிய 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியது மட்டும் பிரச்னை இல்லை. பல முறைகேடுகள் நடந்துள்ளன. வினாத்தாள் கசிந்துள்ளன. அதிக ஊழல் நடந்துள்ளது.
பிரதமர் மோடி அரசின் நடவடிக்கையால் நீட் தேர்வெழுதிய 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது. தேர்வு மையத்துக்கும், பயிற்சி மையத்துக்கும் இடையே, 'பணம் கொடு, பேப்பர் எடு' என்ற விளையாட்டு நடந்து வருகிறது.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணைக்குப் பிறகு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில், வினாத்தாள் கசிவு மற்றும் மோசடியால் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அரசு சீரழித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கார்கே கூறியுள்ளார்.