» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவில் ஒரே நாளில் 843 பேருக்கு கரோனா: மத்திய சுகாதாரத் துறை தகவல்!
சனி 18, மார்ச் 2023 3:30:37 PM (IST)
இந்தியாவில் ஒரே நாளில் 843 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 843 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 5,389 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 126 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக ஒரு நாளின் பாதிப்பு எண்ணிக்கை 800-ஐ கடந்துள்ளது.
ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா ஒரு மரணமும், கேரளாவில் இரண்டு மரணமும் பதிவாகியுள்ளன. கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 58 ஆயிரத்து161 ஆக உள்ளது. கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 799 ஆக உள்ளது. இதுவரை நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 220.64 கோடி கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.