» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தொழிற்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஓதுக்கீடு : தமிழக அரசு அரசாணை வெளியீடு
சனி 4, செப்டம்பர் 2021 5:31:39 PM (IST)
தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கும் சட்டம், நடப்பு கல்வி ஆண்டில் இருந்து அமலுக்கு வரும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் முன்னுரிமை வழங்குவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க டெல்லி உயர்நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் முன்னுரிமை வழங்குவதற்கான சட்டமசோதா ஆகஸ்ட் 26 ந் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்திற்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
2021ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இளநிலை தொழிற் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளதுபோல, பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும் இடம் கிடைக்கும்.
பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் ஆகிய தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணையை உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டிருக்கிறார்.அதில் , அரசுப் பள்ளிகளில் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையில் படித்த மாணவர்களுக்கு பொறியியல் படிப்புகளில் இ, பிஇ, பிடெக், பிஆர்க் ஆகியப்பாடப்பிரிவிலும், பிஎஸ்சி, பிஎஸ்சி (ஹானர்ஸ்), பிடெக் ஆகிய பாடப்பிரிவில் வேளாண்மைப்படிப்பிலும், கால்நடை மருத்துவப் படிப்பில் பிவிஎஸ்சி கால்நடை மருத்துவம், பிடெக் பாடப்பிரிவிலும், பிஎப்எஸ்சி, பிடெக் மீன்வளப்படிப்பிலும், பிஏ எல்எல்பி, பிகாம் எல்எல்பி ,பிஏஎல்எல்பி, பிபிஏ எல்எல்பி, பிசிஏ எல்எல்பி ஆகிய ஹானர்ஸ் படிப்புகளிலும், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களில் இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும்.
மாநில ஒதுக்கீட்டு இடமான 69 சதவீத ஒதுக்கீட்டில் 2021-22 ம் கல்வியாண்டில் வழங்கப்படும்.மேலும் ஒரு கல்லூரியில் உள்ள ஒவ்வொருப் பாடப்பிரிவிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும் என அதில் கூறியுள்ளார்