» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விபத்தில் இறந்த சிங்கப்பூர் இன்ஜினியர் குடும்பத்திற்கு ரூ.1.33 கோடி இழப்பீடு: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!

புதன் 3, ஜூன் 2026 4:37:51 PM (IST)

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த சிங்கப்பூர் தனியார் நிறுவன இன்ஜினியரின் குடும்பத்தினருக்கு, வட்டியுடன் சேர்த்து ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்திற்குத் தூத்துக்குடி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள நடுக்குட்டுடன்காடு, நியூ காலனியைச் சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் ரவி அண்ணாத்துரை (54). இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சைட் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 19.04.2022 அன்று இவர் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்குச் செல்வதற்காகத் தனியார் பேருந்து ஒன்றில் பயணமாகச் சென்றுகொண்டிருந்தார். அந்தப் பேருந்து அருப்புக்கோட்டை முத்தரையர் நகர் விலக்கு அருகே சென்றபோது, சாலையோரமாகப் பஞ்சராகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாகக் கடுமையான வேகத்துடன் மோதியது. இந்த விபத்தில் சிக்கிய ரவி அண்ணாத்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இவரது மறைவைத் தொடர்ந்து, ரவி அண்ணாத்துரையின் மனைவி தனலட்சுமி மற்றும் அவரது மகள்கள் ஆர்த்தி, அதிர்ஷ்டா ஆகியோர் தங்களுக்குரிய நியாயமான இழப்பீடு வேண்டித் தூத்துக்குடி வழக்கறிஞர் வி.ரவீந்திரன் மூலமாகத் தூத்துக்குடி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் உரிமையாளர் மற்றும் அதன் காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி மீது 3 கோடி ரூபாய் இழப்பீடு கோரி இந்த உத்தியோகப்பூர்வ வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கை முழுமையாக விசாரித்த முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.தாண்டவன், விபத்தில் உயிரிழந்த இன்ஜினியரின் குடும்பச் சூழ்நிலை மற்றும் வருவாயைக் கருத்தில் கொண்டு இறுதித் தீர்ப்பளித்தார். 

அதன்படி, சம்பந்தப்பட்ட தனியார் பேருந்தின் காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையான ஒரு கோடியே முப்பத்து மூன்று லட்சம் ரூபாயை மனு தாக்கல் செய்யப்பட்ட தேதி முதல் 7.5% வட்டி மற்றும் நீதிமன்றச் செலவுத் தொகையுடன் சேர்த்து உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.ரவீந்திரன் ஆஜராகி வாதாடினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory