» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

என் மீதான பாலியல் புகார் முற்றிலும் பொய்யானது: காவல் ஆய்வாளர் உருக்கம்

திங்கள் 1, ஜூன் 2026 8:48:59 AM (IST)

தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் அச்சுறுத்தல் புகார்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை என்றும், இப்பொய்ப் புகாரிலிருந்து சட்டப்பூர்வமாக விடுபடாமல் தான் புதிய காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பொறுப்பேற்கப் போவதில்லை என்றும் ஆய்வாளர் திலீபன் உருக்கமாகவும் அதிரடியாகவும் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் திலீபன். இவர் அங்கு பணியாற்றிய, தற்போது சிங்கப்பெண் அதிரடிப்படையில் இடம்பெற்றுள்ள பெண் காவலர் ஒருவருக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு மற்றும் மன உளைச்சல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 

மேலும், இது குறித்துத் தட்டிக்கேட்க வந்த அந்தப் பெண் காவலரின் கணவரை, அனைவர் முன்னிலையிலும் தனது துப்பாக்கியை மார்பில் வைத்துச் சுட்டுவிடுவதாகக் கூறி ஆய்வாளர் திலீபன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தனியார் செய்திச் சேனல், மற்றும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

தன் மீது பரப்பப்படும் இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய ஆய்வாளர் திலீபன், "ஊடகங்களில் என் மீது பரப்பப்பட்டு வரும் செய்திகள் யாவும் முற்றிலும் உண்மைக்கு மாறானவை. இச்செய்தியின் உண்மைத் தன்மையை முழுமையாகத் தெரிந்துகொள்ள என்னிடமோ, என்னுடன் பணியாற்றும் சக ஆண் மற்றும் பெண் காவலர்களிடமோ அல்லது எனது ஊர் மக்களிடமோ உரிய விசாரணை நடத்திவிட்டுச் செய்திகளை வெளியிடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் பேசுகையில், "காவல் பணியை மிகவும் பொறுப்புணர்வோடும் சவாலோடும் விரும்பிச் செய்து வருகிறேன். என்னுடன் பணியாற்றும் சக பெண் காவலர்கள் தங்களது பணி விவகாரங்களிலோ அல்லது வேலைகளில் தொய்வு ஏற்படும் போதோ காவல் துறை ஒழுங்கு நடவடிக்கைக்காகக் கொஞ்சம் கண்டித்துத் திட்டியுள்ளேனே தவிர, எவ்விதமான பாலியல் அச்சுறுத்தலோ அல்லது மன உளைச்சலோ நான் யாருக்கும் கொடுத்ததில்லை. 

அங்கு பணிபுரியும் பெண் போலீசாரை என் சொந்தப் பிள்ளைகளாகவே நான் நினைத்து வருகிறேன். என் மீது அத்தகையதொரு புகாரைப் பெண் காவலர் கொடுக்க வாய்ப்பே இல்லை என நான் 100 சதவீதம் நம்புகிறேன். இது தொடர்பாக உயர் அதிகாரிகள் மேற்கொள்ளும் எந்தவொரு விரிவான விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக உள்ளேன்" என்று உறுதியளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளராக தனது பணியைத் தொடங்கி, பின்னர் ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்ற திலீபன், அதன்பின் தூத்துக்குடி மாவட்டக் காவல் நிலைய ஆய்வாளராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றி வந்தார். 

சமீபத்தில் இவர் திருநெல்வேலி மாவட்டத்தின் சேரன்மகாதேவி காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், "தன் மீதான இந்த அவதூறான பாலியல் புகாரிலிருந்து நான் முழுமையாக விடுபடாமல், சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியில் சேர மாட்டேன்" என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தென் மாவட்டக் காவல் துறை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

DevanJun 1, 2026 - 11:01:25 AM | Posted IP 162.1*****

சுயநலமுள்ள சில ஊடகங்கள் நல்லவர்களை கெட்டவர்களாக சித்தரித்து செய்திபோட்டு அடுத்தவன் பெயருக்கு தீங்குவிளைவித்து குளிர்காய்கின்றன. இதுவும் அதில் ஒன்றே.

அண்டன் ஜாய்Jun 1, 2026 - 09:02:43 AM | Posted IP 172.7*****

தூத்துக்குடி 2ஆம் கேட் தொடங்கி பக்கில் ஒடை பாலம் வரை செல்லீ அம்மன் கோயில் அருகில் கல் பதிப்பதற்காக ரோட்டில் மூன்றை அடி எடுத்து இருக்கிறார்கள் இதன் மூலம் ரோடு மிக குறுகலாகும். பிளாட்பாரத்தை ரோட்டில் போடுகிறார்கள்.. உடனே அதை தடுத்து நிறுத்த வேண்டும்...‌ இல்லையென்றால் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அந்தப் பகுதியில்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory