» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக அரசு பொய் வாக்குறுதிகளைக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டது - அதிமுக வேட்பாளர் சத்யா குற்றச்சாட்டு!

வியாழன் 16, ஏப்ரல் 2026 3:32:14 PM (IST)



திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளாகப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருவதாக, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யா கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யா, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கழுகாசலபுரம், எப்போதும்வென்றான், காட்டுநாயக்கன்கட்டி, ஆதனூர், மிளகுநத்தம், அய்யர்பட்டி, முள்ளூர், கொல்லம்பரம்பு, சந்திரகிரி, மீனாட்சிபுரம், ராமச்சந்திராபுரம், வேலாயுதபுரம், குமாரபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று அவர் ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.

வாக்கு சேகரிப்பின் ஒரு பகுதியாக, ஆதனூர் கிராமத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிரச்சாரத்தின் போது வேட்பாளர் சத்யா பேசுகையில்: "கடந்த 5 ஆண்டுகளாக திமுக அரசு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி ஏமாற்றி வருகிறது. 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக மாற்றுவோம் என்றார்கள்; ஆனால் செய்யவில்லை. 

கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றார்கள்; அதுவும் நடக்கவில்லை. நீட் தேர்வு ஒழிக்கப்படும் எனக் கூறி மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்றினார்கள். மகளிர் உரிமைத் தொகை அனைத்துப் பெண்களுக்கும் போய்ச் சேரவில்லை. தகுதியுள்ள பல பெண்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அதிலும் ஒரு சிலருக்கு வழங்கப்பட்ட தொகையும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மட்டுமே வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளுக்கு அந்தத் தொகை வழங்கப்படவில்லை என்றார்.

இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெருமாள், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் போடுசாமி, எட்டையாபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு கண்ணன் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




Thoothukudi Business Directory