» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நயினார் வழக்கு ஆவணங்கள்: சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைப்பு
திங்கள் 29, ஏப்ரல் 2024 11:44:39 AM (IST)
தேர்தல் பறக்கும் படையால், 3.99 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட, நயினார் நாகேந்திரன் தொடர்பான வழக்கு ஆவணங்களை தாம்பரம் காவல் நிலைய போலீசார், சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சமீபத்தில், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், 3.99 கோடி ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில், இந்தப் பணம், நெல்லை பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இது தொடர்பாக, தாம்பரம் காவல் நிலைய போலீசார், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நயினார் நாகேந்திரனும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த பண விவகாரம் தொடர்பாக, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள, நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியர்களிடமும் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதனால், தாம்பரம் காவல் நிலைய போலீசார், நயினார் நாகேந்திரன் பண விவகாரம் தொடர்பான வழக்கு ஆவணங்களை சென்னை, எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் நேற்று ஒப்படைத்தனர்.