» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி: நாளை முதல் அமல்!
வியாழன் 25, ஏப்ரல் 2024 3:41:37 PM (IST)
மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளை முதல் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அம்பாசமுத்திரம் புலிகள் காப்பகம் துணை இயக்குநர் / வன உயிரினக் காப்பாளர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், "களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திலுள்ள சூழல் சுற்றுலாப் பகுதியான மணிமுத்தாறு அருவிப் பகுதியில் டிசம்பர் 2023-ம் மாதத்தில் பெய்த கனமழையால் பொது மக்கள் நின்று குளிக்கக்கூடிய இடங்கள் முழுவதுமாக சேதம் அடைந்திருந்தது.
பொது மக்கள் நலன்கருதி மணிமுத்தாறு அருவிப்பகுதியில் குளிப்பதற்கு தடைவிதிக்கபட்டிருந்த நிலையில், தற்போது ஆண்கள் பெண்கள் தனித்தனியாக நின்று குளிக்கும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவிப்பகுதியில் பணிகள் நிறைவடைந்த நிலையில் வருகின்ற 26.04.2024 (வெள்ளிக்கிழமை) முதல் பொதுமக்கள் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு காலை 8 மணி முதல் மதியம் 3 வரை வன விதிகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்படுகின்றது.