» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சுயேச்சை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் : பகுஜன் திராவிட கட்சி வேட்பாளர் கோரிக்கை!
வெள்ளி 29, மார்ச் 2024 8:06:17 AM (IST)
தூத்துக்குடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கி, பகுஜன் திராவிட கட்சியின் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வேட்பாளர் க. சண்முகசுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள மனு : நான் தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவுசெய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியான பகுஜன் திராவிட கட்சியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவராக உள்ளேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பகுஜன் திராவிட கட்சி க. சண்முகசுந்தரம் ஆகிய என்னை மக்களவைத் தேர்தல் - 2024, தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு வேட்பாளராக அறிவித்தது.
அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் எனது பூர்த்தி செய்த வேட்பு மனுவை சமர்பித்தேன். எனக்கு கொடுக்கப்பட்ட check list of document in connection with filling of nomination ல் எனது வேட்பு மனு படிவம் , Form A , Form B மற்றும் எனது பிரமாணப்பத்திரத்தில் எந்த ஒரு தவறும் / குறையும் இல்லை என சான்றிதழ் தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வேட்புமனு பரிசீலனையில் எனது மனுவின் Form B ல் எனது பெயர் மற்றும் முகவரி இல்லை என தேர்தல் நடத்தும் அலுவலர் எனது வேட்பு மனுவை வேட்பாளர் பட்டியலில் சுயேட்சையாக சேர்த்ததாக கூறினார்.
இந்த அறிவிப்பு என்னையும் என் கட்சியில் லட்சோப லட்ச தொண்டர்களுக்கும், பேரதிர்ச்சியையும், மன உளச்சலையும் உண்டாக்கி உள்ளது. என்னிடம் உள்ள ஆவணங்களை வைத்து எனக்கான நியாயத்தை கேட்க முன்வந்தபோது தேர்தல் நடத்தும் அலுவலராகிய நீங்கள் அதற்கான கால அவகாசத்தை எனக்கு கொடுக்கவில்லை.
தாங்கள் வேண்டுமென்றே தந்தை கன்சிராம் மற்றும் தந்தை பெரியார் போன்றோர்களின் தத்துவமும், கொள்கையும் மற்றும் பகுஜன் திராவிட கட்சியின் பெயரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் நுழைந்து விடக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு தாங்கள் செயல்பட்டதாக நான் கருதுகிறேன். நான் எந்த விதத்திலும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது . ஆகையால் எனது கட்சியின் பெயரோடு எனது வேட்பு மனுவை ஏற்றுக் கொள்ள வேண்டும். இது எனது குறையே கிடையாது. என்னை பதிவு செய்யப்பட்ட பகுஜன் திராவிட கட்சியின் வேட்பாளராக தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு அறிவிக்க வேண்டும்.
எந்த ஒரு நியாயமான காரணமும் இன்றி வேண்டுமென்றே சட்டத்திற்கு புறம்பாக எந்த ஒரு அறிவிப்பும் எனக்கு கொடுக்காமல், நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன் என்று தெரிந்திருந்தும் தாங்கள் உத்தியோக பூர்வ கடமையை செய்ய தவறியதாக நான் கருதுகிறேன். ஆதலால் உடனடியாக என்னை பகுஜன் திராவிட கட்சியின் வேட்பாளராக அறிவிக்குமாறு கேட்டுக்குக்கொள்கிறேன்.
மேலும் பட்டியல் சாதிகளுடைய வாக்கு தோராயமாக 35% க்கு மேல் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இருப்பதால் அந்த வாக்குகள் எல்லாம் எனக்கு கிடைத்து விடக் கூடாது என்ற அரசியல் காழ்புணர்ச்சியின் உள்நோக்கத்தோடு தாங்கள் செயல்படுவதாக என்னால் எண்ணத் தோன்றுகிறது. ஆதலால், என்னை சுயேச்சை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கி, பகுஜன் திராவிட கட்சியின் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கேட்டுகொள்கின்றேன் என்று தெரிவத்துள்ளார்.