» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பெருமாள் கோவிலில் புரட்டாசி 2வது சனி சிறப்பு பூஜைகள்
சனி 1, அக்டோபர் 2022 10:25:42 AM (IST)
தூத்துக்குடி பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு குருவாயூரப்பன் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் குடும்பத்தில் சகல பாவங்களும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் பெருமாள் கோவில்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமை வழிபாடு கோலாகலமாக நடந்தது. அதிகாலையில் கோ பூஜை மற்றும் விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. பெருமாள் குருவாயூரப்பன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு துளசி பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதுபோல் நவ திருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார் திருநகரி ஆகிய கோவில்களில் பக்தர்கள் காலை முதல் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். இதை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் உற்சவ பெருமாள் புஷ்ப அலங்காரத்துடன் காட்சியளித்தார்.