» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இளம்பெண்ணை உயிரோடு எரித்த கணவர் கைது : மாமனார், மாமியாருக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 3, ஜூலை 2022 1:05:00 PM (IST)
குரும்பூர் அருகே இளம்பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவரை போலீசார் கைது செய்தனர். மாமனார், மாமியாரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள மேல கடம்பா கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாப்பா (38). இந்த தம்பதிகளுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முத்துக்குமார் வீடு கட்டுவதற்காக மனைவி பாப்பாவிடம் நகைகளை கேட்டு தொந்தரவு செய்தாராம். அவர் நகையை கொடுக்க மறுத்து விட்டாராம். இந்நிலையில் நேற்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முத்துக்குமார் மனைவி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்தாராம்.
இதற்கு அவரது மாமனார்- மாமியார் உடந்தையாக இருந்தார்களாம். இதில் பலத்த தீக்காயம் அடைந்த பாப்பாவை அப்பகுதி மக்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது, இந்த சம்பவம் குறித்து குரும்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கணவர் முத்துக்குமாரை கைது செய்தார். மேலும் அவரது தந்தை சந்தனம், தாயார் சந்திர புஷ்பம் ஆகிய 2பேரையும் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.