» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 15 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள் கப்பலில் அனுப்பி வைப்பு!
புதன் 22, ஜூன் 2022 3:22:47 PM (IST)
தூத்துக்குடியில் இருந்து தமிழக அரசு சார்பில் இலங்கை மக்களுக்காக 15 ஆயிரம் டன் அத்தியாவசிய பொருட்களை கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் தமிழக அரசு சார்பில் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த மாதம் 18-ந்தேதி சென்னையில் இருந்து கப்பல் மூலம் 10 ஆயிரம் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 30 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட இதர பொருட்கள் வ.உ.சி. துறைமுகம் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து 9 மாவட்டங்களில் உள்ள 70 அரிசி ஆலைகளில் இருந்து இலங்கைக்கு அனுப்புவதற்கு பொருட்கள் சேகரிக்கப்பட்டு பொட்டலமிடும் பணி முடிவடைந்தது. இதையடுத்து தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு 2-ம் கட்டமாக ரூ.67.7 கோடி மதிப்பீட்டில் நிவாரண பொருட்கள் இன்று புறப்பட்டு சென்றது. இந்த கப்பலில் 14 ஆயித்து 700 டன் அரிசி, 250 டன் பால்பவுடர், 50 டன் மருத்துவ பொருட்கள் ஏற்றி அனுப்பப்பட்டது.
இந்த கப்பலை தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் இருந்து சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், வஉசி துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஜி.வி.மார்க்கண்டேயன் (விளாத்திக்குளம்) மற்றும் கலந்து கொண்டனர்.