» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோடைகால இயற்கை விழிப்புணர்வு முகாம் : ஆட்சியர் கோ.லட்சுமிபதி பங்கேற்பு!
வியாழன் 25, ஏப்ரல் 2024 5:31:49 PM (IST)
வல்லநாடு வனவிலங்கு சரணாலயத்தில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களின் கோடைகால இயற்கை விழிப்புணர்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வனச்சரகம் வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் வனத்துறையின் மூலம் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் அரசு பள்ளி மாணவ / மாணவியர்களுக்கான கோடைகால இயற்கை விழிப்புணர்வு பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் முன்னிலையில் இன்று (25.04.2024) நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்ததாவது: கோடைகால இயற்கை பயிற்சி முகாம் உங்களுக்கு புதிய அனுபவத்தை தருவதோடு உங்களின் அறிவாற்றலை மேம்படுத்தவும், விரிவுப்படுத்துவதற்கும் நடத்தப்படுகிறது. வல்லநாடு வனப்பகுதியில் ஒரு நாள் தங்கி இந்த முகாமில் கலந்துகொள்வது உங்களது பள்ளி வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இந்த முகாமில் காடுகள் மற்றும் வன உயிரினங்களை பற்றி நீங்கள் கற்றுக்கொண்டதை இந்த முகாமிற்கு வரமுடியாத உங்களது நண்பர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். இந்த முகாமில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்ட அனைவரும் வெற்றியாளர்கள்தான்.
காலநிலை மாற்றத்தின் முக்கியத்துவம் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் எதற்காக மரம் வளர்க்கிறோம் என்பதைத் தெரிந்துகொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நம் அனைவரின் பங்களிப்புடன் மரம் வளர்த்து காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினை குறைக்கலாம். நீங்கள் படிப்பில் நன்றாக கவனம் செலுத்த வேண்டும். இங்கு நிறைய மாணவ, மாணவியர்கள் 9ம் வகுப்பு முடித்து 10ம் வகுப்பு செல்கிறீர்கள். உயர்கல்விதான் உங்களது வாழ்க்கையில் அடுத்த 30, 40 ஆண்டுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். எனவே அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்தார்.
முகாமில் வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் உள்ள மான் இனங்கள் குறித்தும், தாவரங்களின் முக்கியத்துவம் குறித்தும் பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமின் தொடர்ச்சியாக அரசு பள்ளி மாணாக்கர்களுக்கிடையே ஓவியப்போட்டி மற்றும் வினாடி வினா நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் கலந்து கொண்ட மாணாக்கர்களுக்கு சான்றிதழ் ஆகியவற்றையும், வருகை தந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகளையும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, வழங்கினார்.
இம்முகாமில் வனவியல் விரிவாக்க அலுவலர் பெ.முனியப்பன், வனச்சரக அலுவலர் த.பிருந்தா, வல்லநாடு வெளிமான் சரணாலயத்தினைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அரசு பள்ளி மாணவ / மாணவியர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள், முதலமைச்சரின் பசுமை தோழர், ஊர்வன ஆராய்ச்சியாளர், ஆசிரியர்கள், தூத்துக்குடி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர், மாவட்ட சுற்றுச்சூழல் சங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் வன பணியாளர்கள் கலந்து கொண்டனர்