» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு தூய்மை பணி : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்
சனி 14, மே 2022 11:29:17 AM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு தூய்மை பணிகளை அமைச்சர் பெ.கீதாஜீவன் துவக்கி வைத்தார்
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மாநகராட்சிக்குட்பட்ட பூங்காக்கள், கடற்கரை பகுதிகளில் தூய்மைபடுத்தும் விழிப்புணர்வு பணிகளை, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தி.சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில் இன்று (14.05.2022) துவக்கி வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழகம் முழுவதும் தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி பகுதியில் இதுபோன்ற பணிகள் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாநகர மக்கள் தூய்மையாகவும் சுகாதாரமான முறையில் வாழ்வதற்கும் மாநகராட்சி மூலம் இப்பணி நடைபெறுகிறது. அரசின் நோக்கம் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும். சுகாதாரத்தையும் பேண வேண்டும் என்பதுதான் நோக்கம்.
தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின்படியும் தமிழக அரசின் ஆணையின் படியும் தமிழகம் முழுவதும் 2வது மற்றும் 4வது சனிக் கிழமைகளில் தூய்மை பாரத திட்டத்தின்கீழ் தூய்மை பணியாளர்கள் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணாக்கர்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், நிறுவனங்கள் இணைந்து சுற்றுப்பகுதிகளை தூய்மையாக வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தமிழ் சாலை - எம்.ஜி.ஆர். பூங்கா, இராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா மற்றும் திரேஸ்புரம் கடற்கரை பகுதிகளில் வ.உ.சி. கலை கல்லூரி, கிரேஸ் பொறியியல் கல்லூரி, சாண்டி தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றை சார்ந்த 400 மாணாக்கர்கள், 400 துப்புரவு பணியாளர்களை கொண்டு தூய்மைப்படுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தேசிய தூய்மை காற்று திட்டத்தின்கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக வாங்கப்பட்டுள்ள நான்கு வாகனங்களை நகர்ப்புறங்களில் சாலையோரங்களில் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை மக்கும், மக்காத கழிவுகளாக பிரித்தெடுத்து அவற்றை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் நுண்ணுயிர் கூடங்களில் சேகரித்து மண்புழு உரங்கள் தயாரிக்கும் திட்ட பணிக்காக தொடக்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவ சுப்பிரமணியன், வட்டாட்சியர் செல்வக்குமார், மாநகராட்சி நிர்வாக பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.அருண்குமார், கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், பொன்னப்பன், கந்தசாமி, ஜாண், பவானிமார்ஷல் ஆகியோர் கலந்துகொண்டனர்.