» சினிமா » செய்திகள்

பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்: திரையுலகினர், ரசிகர்கள் புகழஞ்சலி

திங்கள் 22, மே 2023 4:21:56 PM (IST)

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71.

நடிகர் சரத்பாபு தமிழில், 'உதிரிப்பூக்கள்', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'முள்ளும் மலரும்', 'அண்ணாமலை', ‘முத்து’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சரத்பாபுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

ஆனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஹைதராபாத் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலிருந்த நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை இன்று மோசமடைந்த நிலையில் அவர் உயிரிழந்ததார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1973-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ராம ராஜ்ஜியம்’ படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானார் சரத்பாபு. ‘பட்டினப்பிரவேசம்’ படம் மூலமாக தமிழில் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர், பின்னாட்களில் தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்தார். 1979-ல் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படம் அவருக்கு ரசிகர்களிடையே தனி அடையாளத்தை பெற்றுதந்தது. இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான ‘வசந்த முல்லை’ படத்தில் சரத்பாபு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த 1980-ம் ஆண்டு பி.லெனின் இயக்கத்தில் உருவான ‘நதியை தேடி வந்த கடல்’ படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவுடன் இணைந்து சரத்பாபு நடித்திருந்தார். இந்தப் படம் ஜெயலலிதா நடித்த கடைசிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory