» சினிமா » செய்திகள்

என்னை வாழவைக்கும் தமிழ் தெய்வங்களே… கர்நாடகா விழாவில் ரஜினி பேச்சு

புதன் 2, நவம்பர் 2022 3:31:35 PM (IST)



புனித் ராஜ்குமார் மறைந்து ஒராண்டு நிறைவான நிலையில், கர்நாடக அரசு சார்பில் 'கர்நாடக ரத்னா விருது' வழங்கப்பட்டது.

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.  ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உட்பட ஏராளமன சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்த புனித் ராஜ்குமாருக்கு, கர்சாடக ரத்னா விருது வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் நேற்று சென்னையில் இருந்து பிரைவேட் ஜெட் மூலம் பெங்களூரு சென்றிருந்தார்.

புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் விழா, பெங்களூருவில் உள்ள விதான் சவுதாவில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் அங்கு கூடியிருந்தனர். அப்போது, அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, நடிகர்கள் ரஜினிகாந்த், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர், புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினியிடம் கர்நாடக ரத்னா விருதை வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், "புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் இந்த தருணத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் அவர்களது குடும்பத்திற்கு இறைவன் அருள் இருக்கிறது. புனித் ராஜ்குமார் கடவுளின் குழந்தை" என்றார். தொடர்ந்து பேசிய ரஜினி, "கர்நாடகத்தின் 7 கோடி மக்களுக்கும் கர்நாடக ராஜ்யோத்சவா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

சாதி, மத, பேதம் இல்லாமல் மக்களுக்கு நிம்மதி, மகிழ்ச்சியை வழங்க வேண்டும் என்று தாய் புவனேஸ்வரி, அல்லா, இயேசுவிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். கடவுளின் குழந்தையான புனித் ராஜ்குமார், சிறிது காலம் நம்முடன் இருந்து விளையாடிவிட்டு மீண்டும் கடவுளிடமே சென்று விட்டார். தற்போது மழை பெய்வதால் அதிகம் பேச முடியவில்லை. அவரது தந்தை ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கியபோதும் இதேபோல் மழை பெய்தது" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மேலும், "புனித் ராஜ்குமாரை முதன்முதலில் 1979ம் ஆண்டு சென்னையில் பார்த்தேன். நடிகர் நம்பியாருடன் சுமார் 800 பேர் சபரிமலைக்கு செல்வார்கள். அவர்களில் நடிகர் ராஜ்குமாரும் ஒருவர். அதன் பிறகு புனித் ராஜ்குமார் நடித்த அப்பு படத்தின் வெற்றிவிழாவில் விருது கொடுப்பதற்காக வந்திருந்தபோது பார்த்தேன். புனித் மரணம் அடைந்தபோது நான் ஆஸ்பத்திரியில் இருந்ததால் என்னிடம் யாரும் எதுவும் சொல்லவில்லை. 3 நாட்களுக்கு பிறகே எனக்கு தெரியவந்தபோது மிகவும் வேதனையடைந்தேன்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "புனித் மனிதநேய மிக்கவராக இருந்துள்ளார், ஏழை மக்களுக்கு உதவி செய்துள்ளார். அதனால் அவர் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அவரது ஆத்மா பெரியது. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். நடிப்புடன் மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்தார். சினிமாவில் நல்ல கதைகளை கொண்ட படங்களில் நடித்ததுடன் அதே போல் உதவிகளையும் செய்தார். அதனால் அவர் மக்களின் மனதில் இடம் பிடித்தார். ஆந்திராவில் என்.டி.ராமாராவும் மக்களின் அன்பை பெற்றார். கர்நாடகத்தில் ராஜ்குமாரும் தனது நடிப்பு மற்றும் மனிதநேயத்தால் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதே வரிசையில் புனித் ராஜ்குமாரும் சேர்ந்துள்ளார்" என அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி முழுவதும் கன்னடத்தில் பேசிய ரஜினி, "இந்த விழாவிற்கு ஏராளமான தமிழர்களும் வந்துள்ளனர். என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்பதை மட்டும் தமிழில் பேசி முடித்தார். தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால் இரண்டரை மணி நேரத்துக்கு திட்டமிடப்பட்டிருந்த இந்த விழா 30 நிமிடங்களில் விரைவாக முடிக்கப்பட்டது. ஆனாலும், ரசிகர்கள் இறுதிவரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விடை பெற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory