» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மூலைக்கரைப்பட்டி தான்தோன்றி குளம் தூர் வாரும் பணி துவக்கம்: விவசாயிகள் பெருமகிழ்ச்சி!!

வெள்ளி 19, ஜூன் 2026 3:43:39 PM (IST)


மூலைக்கரைப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள 6 மணிமுத்தாறு பாசனக் குளங்களைத் தூர்வாரி, கரைகளை மேம்படுத்தக் கோரிய பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தனியார் பங்களிப்புடன் தூர்வாரும் பணிகள் இன்று தொடங்கின.

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியைச் சுற்றியுள்ள மணிமுத்தாறு பாசனக் குளங்களின் கரைகளை மேம்படுத்தித் தூர்வார வேண்டும் எனப் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின்படி, தனியார் பங்களிப்புடன் இக்குளங்களைத் தூர்வாரும் திட்டத்திற்கு வழிவகை செய்யப்பட்டது. 

அதன்படி, ஹெல்ப் கிட்ஸ் நிறுவனம், ஷீட் டிரஸ்ட் மற்றும் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து இப்பணியைத் தொடங்கியுள்ளன. இத்தூர்வாரும் பணிக்காகக் 'கோமாட்சு' நிறுவனத்தின் சார்பில் வாடகை இல்லா இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இப்பணியின் அதிகாரப்பூர்வ துவக்க விழா மூலைக்கரைப்பட்டியில் உள்ள 'தான்தோன்றி குளத்தில்' வைத்து நடைபெற்றது. விழாவிற்கு மூலைக்கரைப்பட்டி பேரூராட்சித் தலைவர் பார்வதி தலைமை தாங்கினார். ஷீட் டிரஸ்ட் டாக்டர் பொன்னம்பலம் அனைவரையும் வரவேற்றார். மணிமுத்தாறு பிரிவு அலுவலகப் பொறியாளர் நவீன், மருத்துவர்கள் ராஜசங்கர் மற்றும் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எக்ஸ்னோரா தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆவுடையப்ப குருக்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஹெல்ப் கிட்ஸ் அறக்கட்டளைத் தலைவர் ராம்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தூர்வாரும் பணியைக் கொடியசைத்துத் துவக்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் ஹெல்ப் கிட்ஸ் நிறுவன புஷ்கலா, முகைதீன், டேனியல், சமூக ஆர்வலர்கள் செல்வகுமார், குமார், உஷாராணி, முகமது அலி உட்படப் பலர் கலந்துகொண்டனர். விழாவில் அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் திரளாகப் பங்கேற்று, இயற்கையைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். மேலும், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் திருநெல்வேலி மேலாளர் முருகன் நன்றி கூறினார்.

இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் இந்தத் தான்தோன்றி குளத்தின் தூர்வாரும் பணிகளை முழுமையாக முடித்துவிட்டு, அதனைத் தொடர்ந்து அடுத்த குளத்தின் தூர்வாரும் பணியைத் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தூர் பணி ஒருங்கிணைப்புக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகளின் இந்த அதிரடி நடவடிக்கையால் அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory