» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இரு மொழிக் கொள்கை தொடரும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: தமிழக ஆளுநர் உரை!

வியாழன் 18, ஜூன் 2026 11:12:19 AM (IST)



தமிழகத்தில் 'இரு மொழிக் கொள்கை' தொடர்ந்து தீவிரமாகப் பின்பற்றப்படும் என்றும், 'கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு' மாற்ற வேண்டும் என்று ஆளுநர் ஆர்லேகர் உரையில் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர் உரையுடன் முறைப்படி தொடங்கியது. இக்கூட்டத்தொடரில் தமிழகத்தின் நிதி நிலைமை, மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்றும் மாநில உரிமைகள் குறித்த பல்வேறு முக்கிய விபரங்களை ஆளுநர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

ஆளுநர் உரையின் முக்கிய விபரங்கள் வருமாறு: தமிழக சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 108 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தவெக தலைமையிலான இந்த கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியில் இருந்து இந்த அரசுக்குத் தங்களின் ஆதரவை வழங்கியுள்ளன.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசில் மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், மக்களின் பேராதரவோடு தவெக ஆட்சி அமைத்துள்ளது. இன்று காலை சட்டமன்றத்தில் தமிழில் "வணக்கம்" கூறி தனது உரையைத் தொடங்கிய ஆளுநர், "1967-ல் அண்ணாதுரை, 1977-ல் எம்ஜிஆருக்குப் பிறகு 2026-ல் தமிழகத்தில் ஒரு வரலாற்றுப் புரட்சி நடந்துள்ளது. 

'விசில் புரட்சி' மூலம் இமயமலை அளவுக்கு மாபெரும் வெற்றியை விஜய் பதிவு செய்துள்ளார். சாதி, மதங்களைக் கடந்து, பணம் கொடுக்காமல் தவெகவை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். விஜய்யால் மட்டுமே தமிழகத்தை ஆள முடியும் என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்" என்று பாராட்டு தெரிவித்தார்.

இரு மொழிக் கொள்கை

தமிழகத்தில் 'இரு மொழிக் கொள்கை' தொடர்ந்து தீவிரமாகப் பின்பற்றப்படும் என்றும், ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள 'கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு' மாற்ற வேண்டும் என்றும் இந்த அரசு வலியுறுத்துவதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

மேலும், தமிழகத்திற்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய பல்வேறு நிதிகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளார். குறிப்பாக, மதுரை மற்றும் கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் ஆளுநர் தனது உரையில் வெளிப்படுத்தினார்.

தமிழகத்தின் நிதி நெருக்கடி:

மறுபுறம், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை குறித்தும் ஆளுநர் கவலை தெரிவித்தார். தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் அளவு தற்போது 10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறையானது கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.48,840 கோடியாக இருந்த நிலையில், ஒரே ஆண்டில் அது ரூ.78,324 கோடியாக பெருமளவு அதிகரித்துள்ளது என்றும் ஆளுநர் ஆர்லேகர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory