» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவர்கள் விபூதி, குங்குமத்துடன் பள்ளிக்கு வருவது தவறில்லை: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!

திங்கள் 15, ஜூன் 2026 5:06:31 PM (IST)

மாணவர்கள் விபூதி மற்றும் குங்குமத்துடன் பள்ளிக்கு வருவது எவ்விதத்திலும் தவறில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நிலவி வரும் ஆசிரியர் காலியிடங்கள் அனைத்தும் மிக விரைவாக நிரப்பப்பட உள்ளன. இது தொடர்பான சில உள்கட்டமைப்புப் பிரச்சினைகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. மற்ற பிற சிக்கல்களுக்குக் கல்வித்துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது, அவை அனைத்தும் பேச்சுவார்த்தை மூலம் விரைவில் தீர்க்கப்படும்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தமிழக முதல்வர் போல் செயல்படுவதாக திமுகவினர் விமர்சனம் செய்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராஜ்மோகன், "இந்த விமர்சனங்களுக்கான கதை, திரைக்கதை, வசனம் அனைத்தும் அறிவாலயத்தில் தான் எழுதப்படுகிறது. ஆதவ் அர்ஜுனா மிகுந்த ஆற்றல் மிக்கவர். அவர் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பல்வேறு நல்ல மாற்றங்கள் நடந்து வருகின்றன. அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் அவரைச் சிறுமைப்படுத்தும் நோக்கில் திமுகவினர் அவ்வாறு பேசி வருகின்றனர்" என்று குற்றம் சாட்டினார்.

செய்தியாளர்கள் சந்திப்பைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் அருகே ஆஸ்டின்பட்டியில் உள்ள பி.டி.ஆர். பொறியியல் கல்லூரியில் தற்காலிகமாகச் செயல்பட்டு வரும் அரசு மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில் அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

அப்போது மாணவர்களிடையே பேசிய அவர், "ஒரு குழந்தை எதற்காக அழுகிறது என்பது அதன் தாய்க்கு நன்றாகத் தெரியும். அதுபோல, மாணவர்கள் தங்களின் கல்விச் சார்ந்த குறைகள் குறித்து எனது பெயருக்கு நேரடியாகக் கடிதம் எழுதினால், உங்களுக்காக நான் சிட்டாகப் பறந்து வந்து உதவிகளைச் செய்வேன். மொபைல் போன் மூலமாகவே கூட உங்களுக்கான வேலைகளை முடித்துக் கொடுப்பேன்" என்று உறுதியளித்தார்.

விபூதி, குங்குமம் விவகாரம்:

முன்னதாக, 'மாணவர்கள் சாதி, மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வரக்கூடாது' என ஏற்கனவே கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த ராஜ்மோகன், "மாணவர்கள் தங்களின் கைகளில் சாதி ரீதியிலான வண்ணக் கயிறுகளை  கட்டிக் கொண்டு பள்ளிக்கு வருகின்றனர். வெளியில் இருந்து சில சமூக விரோதிகள் மாணவர்களிடையே சாதிய உணர்வைத் தூண்டி விடுகின்றனர். அதனைத் தடுக்கவே அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், சமய அடையாளங்களான விபூதி, குங்குமம் அணிவது தவறல்ல. நானே விபூதி, குங்குமம் அணிந்து கொண்டு தான் பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்கிறேன். எனவே, மாணவர்கள் விபூதி, குங்குமத்துடன் பள்ளிக்கு வருவதில் எந்தத் தவறும் இல்லை" என்று விளக்கமளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory