» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பயிற்சி தொடக்கம்: சேகரிக்கப்படும் விபரங்கள்..!

திங்கள் 15, ஜூன் 2026 4:57:01 PM (IST)



2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முதற்கட்ட வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு களப்பயிற்சியாளர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று தொடங்கியது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-க்கான முதற்கட்ட பணிகள் தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான மாவட்ட அளவிலான பயிற்சி களப்பயிற்சியாளர்களுக்கு இன்று முதல் ஜூன் 17ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இப்பயிற்சி முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் இன்று தொடங்கி வைத்தனர்.

இந்த 3 நாள் பயிற்சியில் கலந்துகொள்ளும் களப்பயிற்சியாளர்கள், அடுத்தகட்டமாகப் பகுதி வாரியாகச் சென்று களத்தில் நேரடியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளவிருக்கும் கணக்கெடுப்பாளர்களுக்கு (Enumerators) முழுமையான பயிற்சிகளை வழங்க உள்ளனர்.

இந்தியாவில் முதன்முதலாக 1872ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. தற்போது நடைபெறவுள்ள கணக்கெடுப்பானது தொடர்ச்சியான 16ஆவது கணக்கெடுப்பாகும். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெறும் 8ஆவது கணக்கெடுப்பு இதுவாகும்.

சேகரிக்கப்படும் விபரங்கள்:

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக இந்த முறை 'டிஜிட்டல் சென்சஸ்' (Digital Census) முறையில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கணக்கெடுப்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது மொபைல் போனில் இதற்கென உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக செயலி (Mobile App) மூலமாக விபரங்களைச் சேகரிக்க உள்ளனர்.

இந்த முதற்கட்ட கணக்கெடுப்பில் கீழ்க்கண்ட விபரங்கள் சேகரிக்கப்படவுள்ளன:

வீடுகளின் தற்போதைய நிலைமை மற்றும் குடும்பத் தலைவர் பற்றிய விபரங்கள்.

குடும்பத்தில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை.

குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, வடிகால் வசதி போன்ற அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகள்.

குடும்பத்திற்குரிய சொத்துக்கள் (வானொலி, தொலைக்காட்சி, கார், இருசக்கர வாகனம், கணினி, மடிக்கணினி).

குடும்பத்தில் பிரதானமாக உட்கொள்ளப்படும் உணவு வகைகள்.

சென்னை மக்கள் தொகை இயக்குநரகத்தின் இணை இயக்குநர் சின்னத்துரை, உதவி இயக்குநர் மற்றும் மாஸ்டர் பயிற்சியாளர் சரிதா ஜலால், புள்ளியியல் புலனாய்வாளர் அபிஷா சந்தோஷ், வட்டார புள்ளியியல் ஆய்வாளர் ராஜலெட்சுமி ஆகியோர் களப்பயிற்சியாளர்களுக்குப் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

இது முற்றிலும் டிஜிட்டல் முறையில் நடைபெறுவதால், விபரங்களைச் சேகரிக்க வரும் கணக்கெடுப்பாளர்களுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கி, சரியான மற்றும் முழுமையான தகவல்களை வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிகழ்வில் தேர்தல் வட்டாட்சியர் முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory