» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒட்டுமொத்த தமிழக மக்களின் நிம்மதியே முடிந்து விட்டது: இ.பி.எஸ் கடும் தாக்கு!

வியாழன் 5, மார்ச் 2026 3:14:09 PM (IST)

சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூர் கிராமத்திற்குள் இருசக்கர வாகனங்களில் அரிவாள் மற்றும் பட்டாக்கத்திகளுடன் புகுந்த ஒன்பது மர்ம நபர்கள், கண்ணில் பட்டவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இந்தச் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இதேபோன்றதொரு தாக்குதல் இரண்டு நாட்களுக்கு முன்புதான் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நடைபெற்றது. அதன் ரத்த ஈரம் காய்வதற்குள் மீண்டும் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், ஒரு கையாலாகாத பொம்மை முதலமைச்சராக இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.

திமுக அரசின் பெயரளவிலான "குற்றவாளிகள் கைது" நடவடிக்கையைக் கண்டு வன்முறையாளர்கள் அஞ்சுவதாகத் தெரியவில்லை. பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புகுந்து துணிச்சலாக இத்தகைய கொலைவெறித் தாக்குதல் நடத்தப்படுகிறது என்றால், இந்தச் சமூக அநீதியை திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்றுதானே மக்கள் கருத வேண்டியுள்ளது?

மக்கள் உயிர் பயத்தில் இருக்கும் வேளையில், சட்டம் - ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், "முடிந்துவிட்டது" என்று தான் காட்டிய சைகை வைரலானதாக வெற்றுப் பெருமை பேசிக்கொண்டிருக்கிறார். உண்மையில் உங்கள் ஆட்சியில்:     சட்டம் - ஒழுங்கு முடிந்துவிட்டது.     பெண்கள் பாதுகாப்பு முடிந்துவிட்டது.     சமூக நீதி முடிந்துவிட்டது.     ஒட்டுமொத்த தமிழக மக்களின் நிம்மதியே முடிந்துவிட்டது.

இவற்றையெல்லாம் மீட்டெடுக்க ஒரே வழி, இந்த விடியா ஆட்சிக்கு முடிவு கட்டுவதுதான். அதைத் தமிழக மக்கள் விரைவில் செய்வார்கள். இடைக்காட்டூர் தாக்குதலில் தொடர்புடைய அனைவர் மீதும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory