» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சோதனைச் சாவடியில் போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு - வாலிபர் கைது!
புதன் 25, ஜனவரி 2023 8:21:04 AM (IST)
வேலாயுதபுரம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டுவை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வேலாயுதபுரத்தில் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையம் சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியே வந்த பெருமாள் பட்டியை சேர்ந்த வீரணன் மகன் காளிராஜ் (26) என்பவர் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு பணியில் இருந்த ஏட்டு தமிழ்செல்வன், ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக காளிராஜூக்கு அபராதம் விதித்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்ற காளிராஜ் அரிவாளை எடுத்து வந்து தமிழ்செல்வனை கழுத்தில் வெட்ட முயற்சித்துள்ளார். அதனை தடுக்க முயற்சித்த போது தமிழ்ச்செல்வன் கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஏட்டு தமிழ்செல்வன் கீழே விழுந்ததில் காயம் அடைந்தார். உடனே காளிராஜ் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். சம்பவத்தில் காயமடைந்த ஏட்டு தமிழ்செல்வன் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் தப்பி ஓடிய காளிராஜை கைது செய்தனர்.