» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோடை காலம் முடியும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 26, ஏப்ரல் 2024 5:41:00 PM (IST)
தென்காசி மாவட்டத்தில் கோடை காலங்களில் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை இருந்து வருவதால் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் "கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க செய்ய வேண்டியவை உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும்.
ஒ.ஆர்.எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும்.
மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்ல வேண்டும். அதிக உடல் வெப்ப நிலையில் மயக்கம் ஏற்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். குழப்பமான மனநிலையில் சோர்வாக உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
கூடாதவைகள்: கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை கோடை காலங்களில் மதியம் 11.00 முதல் 3.30 மணி வரை தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். வெயில் காலங்களில் வெறும் கால்களுடன் வெளியே செல்ல வேண்டாம். சிறிய குழந்தைகள் மதிய வேளையில் வீட்டின் வெளியே விளையாடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை தவிர்க்க வேண்டும்.
எனவே கோடை காலங்களில் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலைகளால் ஏற்படும் உடல்நிலை பாதிப்புகளை தவிர்க்க கோடை காலம் முடியும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.