» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சேவைக் குறைபாடு: இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.6½ லட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
புதன் 7, டிசம்பர் 2022 3:24:57 PM (IST)
தீவிபத்து ஏற்பட்ட கடைக்கு காப்பீட்டு நிவாரணத் தொகை இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.6லட்சத்து 50ஆயிரம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
கன்னியாகுமரி பார்க் வியூ பஜாரில் ரொசாரி போரஸ் என்பவர் பேன்சி கடை நடத்தி வந்தார். இந்த கடையை அவர் ரூ.9,00,000க்கு இன்சூரன்ஸ் செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த 25.03.2012 அன்று ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கு 25க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்தன. இதில் மேற்கண்ட ரொசாரி போரஸ் கடையும் ஒன்றாகும். தீ விபத்து ஏற்பட்ட கடைகளில் ஒரு சில கடைகளுக்கு சம்பவம் நடந்த ஓராண்டுக்குள் காப்பீட்டுத் தொகை கிடைத்து விட்டது. ஆனால் இவருக்கு மட்டும் விபத்துக்கான காப்பீட்டுத் தொகை இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து கிடைக்கவில்லை. உடனடியாக இவர் நுகர்வோர் அமைப்பு மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் பிரபல இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு விபத்துக்கான காப்பீட்டுத் தொகை ரூ.6,00,000 ஐ 01.05.2013லிருந்து 6 சதவீத வட்டியுடனும், நஷ்ட ஈடு ரூ.40,000 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.10,000 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.