» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீனவர் கொலை வழக்கு: பிரபல ரவுடி கைது!

ஞாயிறு 31, மே 2026 9:11:17 AM (IST)

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே மீனவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளியான பிரபல ரவுடியை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

தூத்துக்குடி தாளமுத்து நகர் அடுத்துள்ள ஆனந்த் நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன் மாரிசெல்வம் (21). மீனவரான இவரும், சோட்டையன் தோப்பைச் சேர்ந்த சந்தனராஜ் (எ) சந்து (22), அண்ணா நகரைச் சேர்ந்த புவனேஷ்குமார் (22), நேரு காலனியைச் சேர்ந்த மரிய அந்தோணி ஜாய்சன் (22) மற்றும் ஹரிஹரசுதன் (22) ஆகியோரும் நண்பர்கள் ஆவர்.

இவர்கள் 4 பேரும் நேரு காலனி பகுதியில் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, மாரிசெல்வத்திற்கும் சந்தனராஜுக்கும் இடையே ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுப் பயங்கர தகராறாக மாறியுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த சந்தனராஜ் உள்ளிட்ட 4 பேரும், தங்களது கையில் வைத்திருந்த அரிவாளால் மாரிசெல்வத்தை ஓட ஓட விரட்டி கொடூரமான முறையில் வெட்டினர். 

இதில் உடல் முழுவதும் பலத்த வெட்டுக் காயமடைந்த மீனவர் மாரிசெல்வம், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொலைச் சம்பவம் குறித்துத் தாளமுத்து நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட நடவடிக்கையாகக் கொலையில் தொடர்புடைய சந்தனராஜ், மரிய அந்தோணி ஜாய்சன், ஹரிஹரசுதன் ஆகிய 3 பேரை போலீஸார் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியான புவனேஷ்குமார் மட்டும் போலீஸாரிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். தனிப்படை அமைத்து அவரைத் தேடி வந்த நிலையில், நேற்று சனிக்கிழமை அவர் போலீஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டுள்ள புவனேஷ்குமார் மீது சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கு உட்பட மொத்தம் 28 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory