» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு: கட்டிட உரிமையாளர் உட்பட 3 பேர் கைது!

ஞாயிறு 31, மே 2026 9:07:24 AM (IST)

கோவில்பட்டி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்த இளைஞர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புளியங்குளம் காட்டுப் பகுதியில் உள்ள ஒரு தனியாருக்குச் சொந்தமான கட்டிடத்தில், எவ்வித அரசு அனுமதியுமின்றி சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிக்கும் பணி ரகசியமாக நடைபெற்று வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இங்கு வழக்கம்போல் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பயங்கர வெடிவிபத்து நேரிட்டது.

இந்த விபத்தின் அதிர்வில் அந்த பட்டாசு தயாரிப்பு கட்டிடமே இடிந்து தரைமட்டமானது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி விருதுநகர் மாவட்டம் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த மாலதி (25) மற்றும் புளியங்குளத்தைச் சேர்ந்த அய்யப்பன் (30) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த பயங்கர வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (25) என்ற இளைஞர் உடல் கருகி பலத்த காயமடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சூரியபிரகாஷ், நேற்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிப்பு கூடத்தை நடத்த அனுமதித்த கட்டிட உரிமையாளர் மற்றும் இதற்கு காரணமான முக்கிய நபர்கள் உட்பட 3 பேரை போலீஸார் கடந்த புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory