» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வேன்கள் நேருக்கு நேர் மோதல்: பெண் பலி; குழந்தைகள் உட்பட 5பேர் படுகாயம்!
செவ்வாய் 30, ஏப்ரல் 2024 4:44:55 PM (IST)
திருச்செந்தூர் அருகே வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் பலி உயிரிழந்தார். குழந்தைகள் உட்பட 5பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை, கொடுங்கையூரை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது குடும்பத்தினர் 11பேர் சென்னையில் இருந்து நேற்று காலை திருச்செந்தூருக்கு ரயிலில் வந்து விடுதியில் தங்கி உள்ளனர். இந்நிலையில் இன்று காலை திருச்செந்தூரில் இருந்து டெம்போ வேனை வாடகைக்கு பிடித்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா புறப்பட்டனர். காலை 10 மணியளவில் கல்லாமொழி, பள்ளிவாசல் நுழைவாயில் எதிரே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் டெம்போ வேன் உருண்டு ஓடியது. அதில் பயணித்த சகாயராஜின் மனைவி சுமதி (37) படுகாயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும் சகாயராஜின் தாயார் மேரி (60), மகன்கள் தன்ஷிக் (14), மனோஜ்குமார் (13), ரமேஷ் என்பவரது மகள் திவ்யதர்ஷினி (8), டெம்போ வேன் டிரைவர் குலசை, முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் விஜயகுமார்(38) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதில் மேரி மற்றும் தன்ஷிக் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், டிரைவர் சுப்பையா திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையிலும், மற்றவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.