» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்பத் தகராறில் பெண் உலக்கையால் அடித்துக் கொலை; கணவர் தற்கொலை!!

வெள்ளி 26, ஏப்ரல் 2024 8:42:27 AM (IST)

திருவேங்கடம் அருகே குடும்பத்தகராறில் உலக்கையால் பெண்ணை அடித்துக்கொன்ற கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தை அடுத்த தெற்கு பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 67). இவருடைய மனைவி சீதாலட்சுமி (60). இவர்களுக்கு அழகர்சாமி (45), அய்யனார் (30), சமுத்திரகனி (27) ஆகிய 3 மகன்களும், காமாட்சி (40) என்ற மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

கருப்பசாமி, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். எனவே, சீதாலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக, கருப்பசாமி சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து, மனைவி என்றும் பாராமல் சீதாலட்சுமியின் தலையில் சரமாரியாக அடித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

ஆத்திரத்தில் மனைவியை அடித்துக்கொன்ற கருப்பசாமி, பின்னர் போலீசாரின் விசாரணைக்கு பயந்தும், தன்னை குடும்பத்தினர் அவதூறாக பேசி தாக்குவார்கள் என்று கருதியும் மனமுடைந்த நிலையில் இருந்தார். அவர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு, மனைவியின் உடல் அருகிலேயே மயங்கி விழுந்து உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.

நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் கருப்பசாமி-சீதாலட்சுமி தம்பதி வீட்டில் இருந்து வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் சீதாலட்சுமி பிணமாக கிடந்ததையும், அருகில் கருப்பசாமி மயங்கிய நிலையில் உயிருக்கு போராடியவாறு கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து திருவேங்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். உயிருக்கு போராடிய கருப்பசாமிைய மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இறந்த சீதாலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவேங்கடம் அருகே குடும்பத்தகராறில் மனைவியை அடித்துக்கொன்ற காவலாளி, போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory