» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபர் மர்ம மரணம் : உறவினா்கள் சாலை மறியல் போராட்டம்!
புதன் 24, ஏப்ரல் 2024 8:17:20 AM (IST)
கோவில்பட்டி அருகே இளைஞா் சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி அவரது உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த தீத்தாம்பட்டி நடுத் தெருவைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் வெங்கடேஸ்வரன் (22). கட்டடத் தொழிலாளியான இவா் கடந்த திங்கள்கிழமை மாலை வேலை முடித்து வீட்டுக்கு வந்தாராம் . பின்னா் அதே ஊரைச் சோ்ந்த காா்த்திக் என்பவருடன் வீட்டை விட்டு சென்ற அவா் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில் வெங்கடேஸ்வரன் குமாரபுரம்-கருவாட்டு கிட்டங்கி அருகே இறந்த நிலையில் கிடந்தாராம். தகவல் அறிந்த கொப்பம்பட்டி போலீஸாா் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.
அவரது மரணம் குறித்து முறையாக விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி அவரது உறவினா்கள் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டக் குழுவினருடன் போலீசார் நடத்திய பேச்சுவாா்த்தையில், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறியதையடுத்து சுமாா் அரை மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.