» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாக்குச்சாவடியில் விதிமீறல்..? மேயர் அதிரடி நடவடிக்கை... தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 19, ஏப்ரல் 2024 11:35:19 AM (IST)
தூத்துக்குடி போல்பேட்டை வாக்குச்சாவடியில், அதிமுக வேட்பாளரின் சின்னம் அடங்கிய மாதிரி வாக்குப்பதிவு அட்டவணையை அகற்றுமாறு மேயர் ஜெகன் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போல்பேட்டை பகுதியில் உள்ள தங்கம்மாள்புரம் நினைவு மேல்நிலைப் பள்ளியில் மேயர் ஜெகன் பெரியசாமி தனது வாக்கினை பதிவு செய்ய வந்திருந்தார். அப்போது, அதிமுக வேட்பாளரின் பூத் ஏஜென்ட் ஒருவர் அதிமுக வேட்பாளரின் முகம் மற்றும் சின்னம் அடங்கிய மாதிரி வாக்குப்பதிவு அட்டவணையை வைத்திருந்துள்ளார்.
இதனைக் கண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, உடனடியாக தேர்தல் பணிகளில் இருந்த அதிகாரிகளிடம் கூறி அதை அப்புறப்படுத்துமாறு கூறினார். அதன் பின்னர் தேர்தல் அதிகாரி பூத் ஏஜென்ட் வைத்திருந்த மாதிரி வாக்குப்பதிவு அட்டவணையை கைப்பற்றி அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் போல்பேட்டை பகுதி வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.