» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பு பெட்டி: தூத்துக்குடியில் ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
திங்கள் 26, செப்டம்பர் 2022 3:31:30 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பு பெட்டியினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அறிமுகப்படுத்தினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியிடங்களில் பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பு பெட்டியினை மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், இன்று தொடங்கி வைத்து தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் (தொடுதல், தவறாக பார்வையிடல், இரட்டை பொருள்பட பேசுதல், ஆபாச படங்கள் அனுப்புதல், பாலியல் உறவுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அழைத்தல்) பணி செய்யும் இடத்தில் ஆண்களால் ஏற்படுமாயின் அது குறித்து புகாரினை இப்பாதுகாப்பு பெட்டியில் போடலாம்.
பாதுகாப்பு பெட்டிக்குள் புகார்கள் பெறப்பட்டால் உடன் உள்ளக புகார் குழு உறுப்பினர்களுக்கு தெரிவித்து திறக்கப்படும். பாதுகாப்பு பெட்டியின் பூட்டின் ஒரு சாவி உள்ளக புகார் குழு தொழிலாளர் உறுப்பினரிடமும், மற்றொரு சாவி உள்ளக புகார் குழு சமூக அமைப்பு சார்ந்த உறுப்பினரிடமும் இருக்கும் என்பதால் மனு மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து உள்ளக புகார் குழு உறுப்பினர்களின் முன்னிலையில் பெட்டியிலிருந்து எடுக்கப்படும் மனு மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் உள்ளக புகார் குழுவால் விசாரணையின் அடிப்படையில் மேற்கண்ட சட்ட நெறிமுறைகளுக்கேற்ப தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே அனைத்து பணியிடங்களிலும் பாதுகாப்பு பெட்டி அமைத்திட வேண்டும். பாதுகாப்பு பெட்டியில் போடப்பட்ட மனு மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற நிலையிலோ, உள்ளக குழுவின் விசாரணை திருப்தி அளிக்காத பட்சத்திலோ எந்த தொழிலாளரும் மகளிர் உதவி எண் 181-ற்கு அல்லது மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தேர்தல் தனி வட்டாட்சியர் ரவி, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.