» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை; 8 பேர் கைது: 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
ஞாயிறு 25, செப்டம்பர் 2022 6:22:25 PM (IST)
தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது..
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திருசத்தியராஜ் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ் தலைமையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்ட போது அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பு அருகே சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் தூத்துக்குடி வடக்குராஜா தெருவைச் சேர்ந்த கென்னடி மகன் சுதர்சன் (28), மணப்பாடு வேளாங்கன்னி மாதாதெருவைச் சேர்ந்த ஓடிலோ மகன் சந்தோஷ் (41), தூத்துக்குடி தேவர்காலனியைச் சேர்ந்த சந்தனபாண்டியன் மகன் அய்யாத்துரை (எ) சுரேஷ் (33) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதே போன்று போலீசார் ரோந்து சென்ற போது தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த வடக்குராஜா தெருவைச் சேர்ந்த கென்னடி மகன் சிம்சன் (26), சக்தி நகரைச் சேர்ந்த தங்கமாரியப்பன் மகன் பலவேசம் (எ) செல்வம் (27), 3செண்ட் அந்தோனியார்புரத்தைச் சேர்ந்தவர்களான சண்முகவேல் மகன் மீரான் (எ) மூர்த்தி (21) மற்றும் முத்துகுமார் மகன் தட்சணாமூர்த்தி (19) ஆகியோரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 3 கிலோ 300 கிராம் கஞ்சா, ரூ.13,750 பணம் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தும், மேற்படி சிம்சன், பலவேசம் (எ) செல்வம், மீரான் (எ) மூர்த்தி, தட்சணாமூர்த்தி ஆகிய 4 பேரையும் கைது செய்து 3 கிலோ 500 கிராம் கஞ்சா, ரூபாய் 13,750/- பணம் மற்றும் Fascino இருசக்கர வாகனம் என மொத்தம் 6கிலோ 800 கிராம் கஞ்சா, ரூ.27,500/- ரொக்கப் பணம் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வடபாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோல் ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஷ் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஹென்சன் பால்ராஜ் மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் கலைவாணர் மற்றும் பொன்பாண்டியன் ஆகியோர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, எட்டையாபுரம் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.,
விசாரணையில் அவர் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பூபாண்டிய புரத்தைச் சேர்ந்த வசமுத்து மகன் முனியசாமி (23) என்பதும் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் முனியசாமியை கைது செய்து அவரிடமிருந்த 275 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.