» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவம் சரமாரி துப்பாக்கிச் சூடு: 30 பேர் பலி, 200பேர் படுகாயம்!

செவ்வாய் 9, ஜூன் 2026 5:22:20 PM (IST)

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதால் அங்கு நிலைமை மிகவும் பதற்றமாக மாறியுள்ளது.

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சுமார் 35 சதவீதப் பகுதியை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு எனத் தனியாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சட்டசபை போன்ற நிர்வாகக் கட்டமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இச்சூழ்நிலையில், இப்பகுதியில் பாகிஸ்தான் அரசால் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வரும் கடுமையான மனித உரிமை மீறல்கள், கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு மற்றும் உள்ளூர் மக்களின் அரசியல் உரிமைகள் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி, 'அவாமி நடவடிக்கை குழு' என்ற மனித உரிமைகள் அமைப்பு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, ஆக்கிரமிப்பு காஷ்மீர் அரசுக்கு எதிராகவும், தங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் மற்றும் முக்கிய உணவுப் பொருட்களில் தகுந்த மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 38 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த மனித உரிமை அமைப்பு சார்பில் இன்று பிரம்மாண்டப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான உள்ளூர் பொதுமக்கள், இளைஞர்கள் எனப் பலரும் திரளாகப் பங்கேற்று, அங்கு நிலவி வரும் மனித உரிமை ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கடுமையான கோஷங்களை எழுப்பினர்.

அப்போது, திரண்டிருந்த போராட்டக்காரர்களை ஒடுக்க நினைத்த பாகிஸ்தான் ராணுவம், அவர்கள் மீது திடீரெனத் தனது துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டுத் தள்ளியது. ராணுவத்தின் இந்த கொடூரமான மற்றும் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டுப் தாக்குதலில் 30 பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

200-க்கும் மேற்பட்டோர் படுகாயம்:

மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அவசரச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இக்கோரச் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதிலும் தற்பொழுது கடுமையான போர்க்களச் சூழலும், எல்லையற்ற பதற்றமும் நிலவி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory