» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் கடும் குளிர்; 36 சிறுவர்கள் சாவு: பள்ளிகளில் காலை கூட்டங்களை நடத்த தடை!
வெள்ளி 12, ஜனவரி 2024 8:22:14 AM (IST)
பாகிஸ்தானில் கடும் குளிருக்கு 36 சிறுவர்கள் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் நிமோனியா காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தானில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர் காலம் ஆகும். அதன்படி கடந்த மாதத்துக்கும் மேலாகவே பாகிஸ்தானில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. அந்த நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெப்ப நிலை இயல்பை விடவும் மிகவும் குறைவாக பதிவாகி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் குளிரின் தாக்கம் மிகுதியாக உள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப்பில் வாட்டி வதைத்து வரும் குளிரின் காரணமாக நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் நிமோனியா காய்ச்சலுக்கு அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் நிமோனியா காய்ச்சல் பாதிப்பால் 36 சிறுவர்கள் பலியானதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் நிமோனியா காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் கூறினர். இதை தொடர்ந்து பள்ளிக் கூடங்களில் காலை கூட்டங்களை நடத்த பஞ்சாப் மாகாண அரசு தடை விதித்துள்ளது.