» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜேஇஇ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: இந்திய அளவில் பிகார் மாணவர் முதலிடம்!
செவ்வாய் 2, ஜூன் 2026 11:30:23 AM (IST)
ஜேஇஇ முதன்மைத் தேர்வில், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சுபம் குமார் 360-க்கு 330 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் உள்ள ஐஐடி, என்ஐடி (NIT), ஐஐஐடி (IIIT) போன்ற புகழ்பெற்ற மத்திய அரசின் உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்காக ஜேஇஇ நுழைவுத் தேர்வு இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது.முதற்கட்டமான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வில் (JEE Main) தகுதி பெறுபவர்கள் என்ஐடி மற்றும் ஐஐஐடி நிறுவனங்களில் சேரலாம். இவர்களில் முதல் 2.50 லட்சம் இடங்களைப் பிடிக்கும் தகுதியான மாணவர்கள் மட்டுமே இரண்டாம் கட்டமான ஜேஇஇ முதன்மைத் தேர்வை (JEE Advanced) எழுத அனுமதிக்கப்படுவர். இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கே 23 ஐஐடி-க்களில் பி.டெக். (B.Tech) உள்ளிட்ட படிப்புகளில் சேரும் உன்னத வாய்ப்பு கிடைக்கும்.
மாணவர்கள் தேர்ச்சி புள்ளிவிவரம்:
நடப்பு 2026-ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு கடந்த மே 17-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வுக்கு நாடு முழுவதும் 1,87,389 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 1,79,694 பேர் தேர்வில் பங்கேற்றனர். திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, மொத்தம் 56,880 மாணவர்கள் சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
மண்டல வாரியான தேர்ச்சிப் பட்டியலில், சென்னை ஐஐடி மண்டலம் (IIT Madras Zone) 14,294 தகுதி பெற்ற மாணவர்களுடன் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மும்பை ஐஐடி மண்டலத்திலிருந்து 12,389 பேரும், தில்லி ஐஐடி மண்டலத்திலிருந்து 10,697 பேரும் தகுதி பெற்றுள்ளனர். தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகள் மற்றும் இறுதி விடைக் குறிப்புகளை (Final Answer Key) அதிகாரப்பூர்வ வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தரவரிசைப் பட்டியல்:
முதலிடம்: பிகார் மாநிலம் கயாவைச் சேர்ந்த சுபம் குமார் (330 மதிப்பெண்கள் - தில்லி மண்டலம்).
இரண்டாமிடம்: ஹரியாணா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த கபீர் சில்லர் (329 மதிப்பெண்கள்).
மூன்றாமிடம்: ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்த ஜதின் சஹார் (319 மதிப்பெண்கள்).
மாணவிகள் பிரிவு: மகாராஷ்டிர மாநிலம் புணேயைச் சேர்ந்த அரோஹி தேஷ்பாண்டே 280 மதிப்பெண்கள் பெற்று மாணவிகள் தரவரிசையில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். (இத்தேர்வில் பங்கேற்ற ஒரே ஒரு மூன்றாம் பாலினத்தவர் தகுதிபெறத் தவறிவிட்டார்).
வெற்றியாளரின் பேட்டி: அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவர் சுபம் குமார் தனது வெற்றி குறித்துக் கூறுகையில், "தேர்வுக்கான பயிற்சியின் போது சமூக ஊடகங்களையும், எதிர்மறையான செய்திகளையும் நான் முழுமையாகத் தவிர்த்துவிட்டுப் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன். லட்சியத்தை அடைய விடாமுயற்சியும் உத்வேகமும் அவசியம். நான் சந்தித்த சவால்களை எனக்கான ஊக்கமாக மாற்றிக் கொண்டேன். அடுத்து மும்பை ஐஐடி-யில் (IIT Bombay) பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர முடிவு செய்துள்ளேன்," எனத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுகவிலிருந்து விலகிய 4 எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:15:29 PM (IST)

உஜ்வாலா மானிய கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4 ஆகக் குறைப்பு: பயனாளிகளுக்கு அதிர்ச்சி!
செவ்வாய் 9, ஜூன் 2026 10:40:06 AM (IST)

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: இண்டியா கூட்டணி வலியுறுத்தல்
செவ்வாய் 9, ஜூன் 2026 10:18:50 AM (IST)

செய்தித்தாள்களில் உணவுகளை மடித்து வழங்கினால் அதிரடி நடவடிக்கை! – FSSAI எச்சரிக்கை!
திங்கள் 8, ஜூன் 2026 5:11:07 PM (IST)

டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை: ராகுல் காந்திக்கு எதிராகப் பரபரப்பு பேனர்கள்!
திங்கள் 8, ஜூன் 2026 11:36:10 AM (IST)

ரூ.6,000 சம்பளத்திலிருந்து கோடிக் கணக்கில் சொத்து குவிப்பு: விசாரணையில் சிக்கிய அரசுப் பொறியாளர்!
திங்கள் 8, ஜூன் 2026 10:46:58 AM (IST)









