» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மருத்துவ உலகில் பெரு வியப்பு: 5 நாட்கள் போராடி 4 குழந்தைகளை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த பெண்!
சனி 16, மே 2026 5:24:58 PM (IST)

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தும் வகையில், கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு ஐந்து நாட்கள் இடைவெளியில் 4 குழந்தைகள் (இரட்டை ஆண், இரட்டைப் பெண்) எவ்வித அறுவை சிகிச்சையுமின்றி (சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளன. தற்போது தாயும், நான்கு குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் சம்பல் மாவட்டம் ஓவரி கிராமத்தைச் சேர்ந்தவர் அமீனா. இவர் பிரசவத்திற்காக லோதிப்பூரில் உள்ள தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த மே 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். முன்னதாக, இவரது கர்ப்ப கால பரிசோதனையின் போதே, வயிற்றில் 4 குழந்தைகள் வளர்வது ஸ்கேன் மூலம் கண்டறியப்பட்டது. ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறப்பது தாயின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்பதால், மருத்துவக் குழுவினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இப்பிரசவத்தைக் கையாண்டனர்.
அமீனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாள் (மே 9) இரவே, அவருக்கு இயற்கையான முறையில் வலி ஏற்பட்டு, முதலாவது குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. பொதுவாக, மற்ற குழந்தைகளையும் உடனடியாக வெளியே எடுக்க அறுவை சிகிச்சை (Cesarean) செய்வது வழக்கம். ஆனால், அமீனாவின் அப்போதைய உடல்நிலை அறுவை சிகிச்சைக்கு ஒத்துழைக்காத வகையில் மிகவும் பலவீனமாக இருந்ததால், மருத்துவர்கள் சிசேரியன் செய்யாமல் அவரைத் தீவிரக் கண்காணிப்பில் வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஐந்து நாட்கள் கழித்து கடந்த மே 14-ஆம் தேதி, அமீனாவுக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டு, அடுத்தடுத்து 3 குழந்தைகளும் சுகப்பிரசவத்திலேயே பிறந்தன. மருத்துவ வரலாற்றில் 5 நாட்கள் இடைவெளியில், ஒரு தாய்க்கு 4 குழந்தைகள் சுகப்பிரசவத்தில் பிறப்பது இதுவே மிக அரிதான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
பிறந்த 4 குழந்தைகளில் 2 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் ஆகும். இத்தனித்துவமான பிரசவத்தை முன்னின்று நடத்திய மருத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் ஷுப்ரா அகர்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில்: "எங்கள் மருத்துவமனை வரலாற்றிலேயே ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள், அதுவும் அறுவை சிகிச்சையின்றிச் சுகப்பிரசவத்தில் பிறப்பது இதுவே முதல் முறையாகும். இதில் கடுமையான மருத்துவச் சவால்களும், ஆபத்துகளும் (High Risk) இருந்தன.
எனினும், தாயின் உடல்நிலையைக் கருதி உரிய மருத்துவ வழிகாட்டுதல்களுடன் இதனைச் சாத்தியமாக்கியுள்ளோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்பொழுது 4 குழந்தைகளும் தீவிரக் கண்காணிப்பில் (Neonatal Ventilator Support) வைக்கப்பட்டுள்ளனர். தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மருத்துவர்களின் அர்ப்பணிப்பும், தாயின் மன வலிமையும் இணைந்து இந்த அரிய மருத்துவச் சாதனையை நிகழ்த்தியுள்ளது என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எத்தனால் பெட்ரோல் வாகனங்களுக்குக் காப்பீடு மறுப்பு? வதந்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி!
புதன் 24, ஜூன் 2026 5:03:34 PM (IST)

மம்முட்டி, மாதவன் உள்ளிட்ட 65 பேருக்கு பத்ம விருதுகள் குடியரசுத் தலைவர் விருது வழங்கினார்!
புதன் 24, ஜூன் 2026 11:14:06 AM (IST)

பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு தொழிலதிபர் கொலை : வருங்கால மனைவி, காதலன் கைது!
புதன் 24, ஜூன் 2026 11:07:28 AM (IST)

திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்: மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 12:05:48 PM (IST)

லக்னோ அனிமேஷன் பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: மாணவர்கள் உட்பட 15 பேர் பலி!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:44:03 AM (IST)

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயிலுக்கு ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வ ஒப்புதல்!
திங்கள் 22, ஜூன் 2026 5:14:00 PM (IST)








