» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வங்கதேச எம்.பி. கொலை: உடலை துண்டு துண்டாக வெட்டு கொடூரம்!

வெள்ளி 24, மே 2024 12:02:16 PM (IST)

வங்கதேச எம்.பி. அன்வருல் அஸீம் அனார் கொலை பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பியான அன்வருல் அஸீம் அனாா் (56), கொல்கத்தாவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தனிப்பட்ட பயணமாக கடந்த மே 12-ஆம் தேதி வந்தாா். பாராநகா் பகுதியில் உள்ள தனது நண்பா் கோபால் பிஸ்வாஸின் வீட்டில் தங்கியிருந்த அவா், மறுநாள் மருத்துவரை சந்திக்கச் செல்வதாக கூறிவிட்டு சென்றவா் திரும்பி வரவில்லை.

இந்தச் சூழலில், கொல்கத்தாவில் அன்வருல் படுகொலை செய்யப்பட்டதாகவும், இச்சம்பவம் தொடா்பாக டாக்காவில் 3 போ் கைது செய்யப்பட்டதாகவும் வங்கதேச அரசு புதன்கிழமை தெரிவித்தது.கொல்கத்தாவின் நியூ டவுண் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இக்கொலை நடந்துள்ளது. அன்வருல் உடல் இன்னும் கைப்பற்றப்படாத நிலையில், மேற்கு வங்க சிஐடி போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். 

இதுகுறித்து சிஐடி உயரதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறுகையில், ‘அன்வருலின் நெருங்கிய நண்பரான அமெரிக்க குடிமகன் ஒருவருக்கு குடியிருப்பை அதன் உரிமையாளா் வாடகைக்கு விட்டிருந்தாா். எம்.பி.யை கொலை செய்ய அந்த நண்பா்தான் கொலையாளிகளுக்கு ரூ.5 கோடி கொடுத்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திட்டமிட்டு இந்தச் கொலைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது’ என்றாா்.

இந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்ட கொல்கத்தா குடியிருப்பில், அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, பல்வேறு பிளாஸ்டிக் பைகளில் போடப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, அன்வருலை கொலை செய்த கும்பல், அந்த வீட்டின் ஒரு கழிப்பறையில் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி தசைகளை தனியே பிரித்தெடுத்து அவற்றை மஞ்சள் தூளில் போட்டு சில நாள்கள் வரை கெடாமல் இருக்கும்படி பார்த்துக்கொண்டுள்ளனர். எலும்புகளையும் துண்டுத் துண்டாக வெட்டி சிறு சிறு பிளாஸ்டிக் பைகளில் போட்டுள்ளனர். 

பிறகு அவற்றை வெளியே கொண்டு சென்று தடயமே கிடைக்காத அளவுக்கு குற்றவாளிகள் எங்காவது வீசியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும், துளியும் தடயமே இல்லாத வகையில், அந்த குடியிருப்பின் கழிப்பறை ஆசிட் கொண்டு பல முறை கழுவப்பட்டிருக்கிறது. பிறகுதான் குற்றவாளிகள் அந்தக் குடியிருப்பிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள்.

சம்பந்தப்பட்ட குடியிருப்பிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அடையாளம் தெரியாத 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணுடன் அன்வருல் வந்ததும், கடந்த மே 15 முதல் 17 வரையிலான நாள்களில் எம்.பி.யைத் தவிர மற்றவா்கள் அடுத்தடுத்து குடியிருப்பில் இருந்து வெளியேறியதும் கண்டறியப்பட்டது. எனவே, அவரது உடலை கொலையாளிகள் பல்வேறு பகுதிகளில் வீசி எறிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory