» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அதிகரிக்கும் கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க முதல்வர் அறிவுறுத்தல்

வெள்ளி 26, ஏப்ரல் 2024 10:41:52 AM (IST)

தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும், வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, மக்கள் கவனத்துடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினேன். வெப்பநிலை அதிகமாகும்போது குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், உடல்நலக் குறைபாடு உடையவர்களை மிக கவனமாக பாதுகாக்க வேண்டும். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக அளவில் மோர், அரிசி கஞ்சி, இளநீர், எலுமிச்சை சாறு, ஓஆர்எஸ் கரைசல் போன்றவற்றை பருக வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

வெளியில் செல்லும்போதும், திறந்த வெளியில் பணியாற்றும்போதும், தலையில் பருத்தி துணி, துண்டு, தொப்பி அணிய வேண்டும். தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.

மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், சமூகநல மையங்கள், மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நகர்ப்புறங்கள், அதை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 1,038 இடங்களில் தண்ணீர் பந்தல்களில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 842 இடங்களில் கூடுதல் தண்ணீர் பந்தல் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தண்ணீர் பந்தல்களில் பொதுமக்களுக்கு கூடுதலாக ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்பட உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். அதிகாரிகள் முழு அக்கறை செலுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory