» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மரத்தில் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 6 மாணவர்கள் பலி - 20பேர் படுகாயம்!
வியாழன் 11, ஏப்ரல் 2024 12:49:31 PM (IST)
அரியானாவில் மரத்தில் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.
அரியானா மாநிலம் மகேந்திர கர்க் மாவட்டம் நர்னால் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ் ஒன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 4 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். பள்ளி பஸ் உன்ஹானி கிராமத்தில் சென்ற போது விபத்தில் சிக்கியது.
மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். உடனே கிராம மக்கள், போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 6 மாணவர்கள் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து மாவட்ட கல்வி அலுவலர் கூறும்போது, முதற்கட்ட விசாரணையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மரத்தில் மோதியுள்ளது. டிரைவர் குடிபோதையில் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது என்றார். விடுமுறை நாளான இன்று பள்ளி இயங்கி உள்ளது. மேலும் விபத்துக்குள்ளான பள்ளி பஸ் தகுதி சான்றிதழ் 6 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.