» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றி அமைக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
செவ்வாய் 28, நவம்பர் 2023 11:12:26 AM (IST)
கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்று திரைப்படத்துறையினருக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சங்க காலத்தில் பேகன் தோகை விரித்த மயிலுக்கும், பாரி துவண்டு விழுந்த கொடி மலருக்கும் மனம் இறங்கியதைப் போல, பிற்காலத்தில் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரைப் போல, இதயத்தின் வழியே சுரக்கும் ஈரம்தான் மனித நேயத்தின் வாசல் என்ற ஈகையின் மகத்துவத்தை கடைபிடித்தவர் எம்.ஜி.ஆர். அவர்கள். தன்னிடம் வந்து உதவி கேட்பவர்களுக்கு வலது கை கொடுப்பதை இடது கை அறியாது என்பார்களே அதைப்போல இல்லையென்று சொல்லாமல் வாரி வழங்கிய வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்கள்.
தன்னுடைய திரைப்படங்கள் மூலம் நல்ல சிந்தனைகளையும், கருத்துள்ள பாடல்களையும் மக்கள் மனதிலே பதிய வைத்து, மக்களை நல்வழிபடுத்திய மாபெரும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாவதில் முக்கியப் பங்கு வகித்த பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர். அவர்கள். "எனது இதயக்கனி எம்.ஜி.ஆர்" என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
1967 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்பட்டதற்கு அடித்தளமாக விளங்கியவர் எம்.ஜி.ஆர். அவர்கள். "தம்பி நீ முகத்தைக் காட்டினால் போதும், முப்பது லட்சம் ஒட்டு வரும்" என்று பேரறிஞர் அண்ணா அவர்களே எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கூறியதை நான் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு, அவருடைய கொள்கைகளை நிலைநாட்டுவதற்காக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கி, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக தொடர்ந்து பத்து ஆண்டுகள் இருந்து, மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றிய பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், திரைத் துறை மற்றும் அரசியல் துறை ஆகிய இரண்டிலும் கொடிகட்டி பறந்து, யாரும் எட்ட முடியாத உயரத்தை அடைந்து, வரலாற்றின் பக்கங்களில் ஒரு நிலையான, நிரந்தரமான இடத்தை பிடித்த மகத்தான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
எம்.ஜி.ஆர். மறைந்து 35 ஆண்டுகள் ஆகியும், உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்தவராக இன்றும் அவர் வாழ்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவர் செய்த அளப்பரிய சாதனைகள்தான். இப்படிப்பட்ட மகத்தான தலைவர் மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்ற நாள் டிசம்பர் 24. இந்த நாள், தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள். இந்த நாளில், தமிழ் திரைப்படத் துறையின் அனைத்து சங்கங்களும் இணைந்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடுவதாக அறிவித்திருக்கிறது.
"வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் நிற்பவர் யார்?" என்ற பாடல் வரிகளுக்கேற்ப, மக்கள் மனங்களில் நீக்கமற நிலைத்திருக்கும் எம்.ஜி.ஆர். அவர்களின் தன்னலமற்ற தியாகங்களை, சாதனைகளை, பணிகளை கருத்தில் கொண்டு, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தினை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ளுமாறு தமிழ் திரையுலகத்தையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவார்கள்: விஜய் அறிக்கை
திங்கள் 17, மார்ச் 2025 9:05:15 AM (IST)

மும்மொழிக் கொள்கையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது: அன்புமணி குற்றச்சாட்டு!
புதன் 12, மார்ச் 2025 3:35:44 PM (IST)

எந்த மொழி மீதும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் தனிப்பட்ட வெறுப்பு இருந்ததில்லை: முதல்வர்
திங்கள் 3, மார்ச் 2025 11:37:05 AM (IST)

மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியல்: ராமதாஸ் குற்றச்சாட்டு!
வியாழன் 20, பிப்ரவரி 2025 4:07:47 PM (IST)

டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க. ஆட்சி : பிரதமர் மோடி மகிழ்ச்சி
சனி 8, பிப்ரவரி 2025 4:01:15 PM (IST)

தமிழக அரசியலில் மாபெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவோம்: தொண்டர்களுக்கு விஜய் கடிதம்
திங்கள் 3, பிப்ரவரி 2025 9:00:02 PM (IST)

JAY RASIGARDec 7, 2023 - 04:30:26 PM | Posted IP 172.7*****