» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
கோவில்பட்டிபள்ளிகளில் மூலிகை தோட்டம்!
செவ்வாய் 23, ஜனவரி 2024 4:59:23 PM (IST)
மூலிகை செடிகளின் பயன்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 3 பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறை, தேசிய பசுமை படை கோவில்பட்டி கல்வி மாவட்டம், மத்திய அரசின் சூழல், வனம், காலநிலை மாற்றங்கள் துறையின் சுற்றுச்சூழல் கல்வி திட்டத்தின் கீழ் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கரிசல்குளம் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி, எட்டையாபுரம் பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை செடிகளின் பயன்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் மூலிகை தோட்டத்தில் நீர்பிரம்மி, மஞ்சள் கரிசாலை, துளசி, பிரண்டை, நித்தியகல்யாணி, திருநீற்றுப்பச்சிலை, சங்குபுஷ்பம், துத்தி, உள்ளிட்ட 30 வகையான மூலிகை செடிகள் இடம் பெற்றுள்ளன.
மூலிகை தோட்டத்தின் துவக்க விழா ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ஊத்துப்பட்டி பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் தலைமை வகித்தார். கோவில்பட்டி வனச்சரகர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளி தலைமையாசிரியர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி பசுமை படை ஆசிரியர் மணி வரவேற்றார். கோவில்பட்டி இடைநிலை கல்வி மாவட்ட அலுவலர் ஜெய்பிரகாஷ் ராஜன் கலந்து கொண்டு மூலிகை தோட்டத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதில் முதல்வரின் பசுமை புத்தாய்வுத் திட்ட தூத்துக்குடி மாவட்ட பசுமை தோழி ராகினி, வனத்துறை வனவர்கள் கேசவன், பிரசன்னா பாலகுமார், ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மூலிகை பயன்பாடு குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முத்து முருகன், தமிழ் தம்பி, அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் முத்துசாமி சுரேஷ்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.பட்டதாரி ஆசிரியை சாந்தி நன்றி கூறினார். இதேபோல் கரிசல்குளம் ஆதிதிராவிட நல உயர்நிலை பள்ளியில் தலைமையாசிரியர் சங்கர்குமார், எட்டையாபுரம் பாரதியார் நூற்றாண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியை மகாலட்சுமி, பசுமைப்படை ஆசிரியை அனுசியா ஆகியோரும் மூலிகை தோட்டத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.