» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி : பாண்டவர்மங்கலம் அணி சாம்பியன்!!!!
வியாழன் 4, ஜனவரி 2024 10:21:19 AM (IST)
தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆண்கள் ஹாக்கி போட்டியில் பாண்டவர்மங்கலம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் ஹாக்கி கிளப் சார்பாக 18ஆம் ஆண்டு அய்யாசாமி நினைவு மாவட்ட அளவிலான ஆண்கள் ஹாக்கி போட்டி கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கைப்புல் ஹாக்கி மைதானத்தில் வைத்து 31.12.2023 மற்றும் 1.1.2024 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் 12 அணிகள் கலந்து கொண்டு விளையாடின .
இறுதிப்போட்டியில் பாண்டவர்மங்கலம் ஹாக்கி அணியினரும் இலுப்பையூரணி டாக்டர் அம்பேத்கர் ஹாக்கி கிளப் அணியினரும் விளையாடின. பாண்டவர்மங்கலம் ஹாக்கி கிளப் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது . முதல் பரிசாக சுழற் கோப்பையும் ரூபாய் 8000 பெற்றனர். இரண்டாவது பரிசாக டாக்டர் அம்பேத்கர் அணியினருக்கு சுழற் கோப்பையும் ரூபாய் 6000 வழங்கப்பட்டது.
மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் தெற்கு திட்டங்குளம் பாரதி ஹாக்கி அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் இலுப்பை யூரணி 11 அணியினரை வெற்றி பெற்று மூன்றாவது பரிசாக சுழற் கோப்பையும் ரூபாய் 4000 ரொக்க பரிசம் பெற்றனர் நான்காவது பரிசை இலுப்பையூரணி 11 அணியினர் சுழற் கோப்பையும் ரூபாய் 2000மும் பெற்றனர் .
பரிசளிப்பு விழாவில் ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முகபாரதி விழாவில் தலைமை தாங்கினார். பாண்டவர்மங்கலம் ஹாக்கி கிளப் செயலாளரும் ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி துணைத் தலைவருமான மணிமாறன் மற்றும் மூத்த ஹாக்கி வீரர்கள் பொன்மணி, தமிழரசன், வசந்தகுமார், இளையராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவில்பட்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அன்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு சுழற் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினார். முன்னதாக தேசிய ஹாக்கி நடுவர் முருகன் வரவேற்றார். விழாவின் இறுதியில் பாண்டவர்மங்கலம் ஹாக்கி கிளப் துணைச் செயலாளர் தெய்வபாலன் நன்றி உரையாற்றினார்.
விழாவில் நகர்மன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் பொன்னுத்துரை ஆகியோர் கலந்துகொண்டனர் நடுவர்களாக கார்த்திக் ராஜா, கிருஷ்ணமூர்த்தி, சந்தானராஜ், ராயர், சுதாகர், கார்த்திக், சுமித், செந்தில்குமார், ஆகியோர் செயல்பட்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை வசந்த் ராஜா, சுரேந்தர், சுரேஷ்குமார், எட்டு ராஜ், சிவசெல்வம், ராஜேஷ், ஆகியோர் செய்திருந்தனர்