» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருவள்ளுவர் தெய்வீகமானவர், மனிதப் பிறவி அல்ல: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
சனி 25, மே 2024 10:18:15 AM (IST)
திருவள்ளுவர் மனிதப் பிறவி அல்ல, தெய்வீகமானவர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கருதப்படுகிறது. அதனால், அன்றைய தினம் தமிழர்களில் ஒரு தரப்பினரால் திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று வைகாசி அனுஷம் மற்றும் திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று வழிபாடு நடத்தினார்.
அதன் பிறகு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற 'திருவள்ளுவர் திருநாள்' விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது; "எனது பள்ளி பருவத்தில் திருவள்ளுவர் பற்றி முதன்முதலில் அறிந்தேன். நான் ஆளுநராக இருக்கலாம், ஆனால் திருவள்ளுவரின் மாணவன், சிஷ்யன் என்பதில் பெருமை கொள்கிறேன். எப்போது குறள் என் வாழ்க்கையில் வந்ததோ, அன்று முதல் என் வாழ்வில் முயற்சியும், உழைப்பும் உந்துதலாக இருந்தது.
நான் எப்போது தமிழ்நாடு வந்தேனோ, முதல் புத்தகமாக திருக்குறளை படித்தேன், படித்து வருகிறேன். திருவள்ளுவர் சாதாரண மனிதப் பிறவி அல்ல, அதையும் தாண்டி தெய்வீகமானவர்." இவ்வாறு அவர் பேசினார்.