» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: நயினார் நாகேந்திரனுக்கு விரைவில் சிபிசிஐடி சம்மன்!

புதன் 1, மே 2024 11:55:26 AM (IST)

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து கடந்த மாதம் 6-ந்தேதி நெல்லை புறப்பட்டு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், சிலர் ரூ.4 கோடி கொண்டு செல்வதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்ற அந்த ரயிலில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த ரயிலில் இருந்த 3 பேர் ரூ.4 கோடி கொண்டு சென்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பணத்தை எடுத்து சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

போலீஸ் விசாரணையில் இந்த ரூ.4 கோடி பணத்தை நெல்லை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எடுத்து சென்றதாக கைதான 3 பேரும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நயினார் நாகேந்திரன் மீதும் வழக்கு பாய்ந்தது. அவரை விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினார்கள். மே.2-ந்தேதி அன்று விசாரணைக்கு ஆஜராவேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். வழக்கு தொடர்பான ஆவணங்களை தாம்பரம் போலீசாரிடம் இருந்து பெற்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார், உடனடியாக விசாரணையை தொடங்கினார்கள். நயினார் நாகேந்திரன் மீதும், ரூ.4 கோடி பணத்துடன் கைது செய்யப்பட்ட சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதிதாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்ததன் பேரில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் நேற்று விசாரணைக்கு ஆஜரானார்கள். அவர்களிடம் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். வழக்கு தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரைவில் சம்மன் அனுப்புவார்கள் என்று தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory