» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆட்டோ மீது கல்லெறிந்து விபத்து - டிரைவர் காயம் வாலிபருக்கு ஓராண்டு சிறை!
திங்கள் 11, மார்ச் 2024 7:39:34 PM (IST)
தென்காசி அருகே கல்லெறிந்து ஆட்டோவை விபத்துக்குள்ளாக்கி டிரைவரை படுகாயம் அடையச் செய்த வாலிபருக்கு தென்காசி கோர்ட்டில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தென்காசி அருகே ஆயிரப் பேரி பண்ணை தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் மாரியப்பன் (36). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 31.10.2012 அன்று தனது ஆட்டோவை மதுரை- கொல்லம் மெயின் ரோட்டில் தென்காசி நோக்கி வரும் பொழுது பேருந்துக்காக காத்திருந்த சிவராம பேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பண்டாரம் முப்புடாதி மகன் துரை (34) என்பவர் ஆட்டோவை நிறுத்த முயன்று உள்ளார் . ஆனால் ஆட்டோ நிற்கவில்லை .
இதனால் ஆத்திரமடைந்த துரை கல்லெடுத்து ஆட்டோவை ஓட்டிச் சென்ற மாரியப்பன் மீது எறிந்துள்ளார் . ஆட்டோ மீது கல் விழுந்ததால் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற மாரியப்பன் படுகாயம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து ஆய்க்குடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து துரையை கைது செய்தனர் .
இந்த வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி அனுராதா வழக்கை விசாரணை செய்து துரைக்கு ஓராண்டு கடுங்காமல் சிறைத் தண்டனையும், ரூபாய் 3000 அபராதமும் அபராதம் செலுத்த தவறினால் ஆறு மாதம் சிறைத் தண்டனையும் விதித்து இன்று தீர்ப்பு கூறினார். இவ் வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் வேலுச்சாமி ஆஜரானார்.