» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரியில் ரூ.35 கோடியில் கடலரிப்பு தடுப்பு பணி: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்!
திங்கள் 11, மார்ச் 2024 3:29:24 PM (IST)
வள்ளவிளை முதல் பூத்துறை எடப்பாடு வரை ரூ.35 கோடி மதிப்பில் கடலரிப்பு தடுப்பு மேற்கொள்வதற்கான பணியினை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் வள்ளவிளை முதல் பூத்துறை எடப்பாடு வரை கடலரிப்பு தடுப்பதற்கான கற்கள் போடும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் இன்று (11.03.2024) துவக்கி வைத்து தெரிவிக்கையில்:
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட வள்ளவிளை, புத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் வசிக்கும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையிலும் அவர்களின் கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அதற்கான ஒப்புதல் உடனடியாக வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.35 கோடி மதிப்பில் வள்ளவிளை முதல் பூத்துறை எடப்பாடு வரை கடலரிப்பு தடுப்பதற்கான கற்கள் போடுவதற்கான பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடித்து கடலோர கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும்படி நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை மாவட்ட செயற்பொறியாளர் பாஸ்கரன், வட்டார முதன்மை பணியாளர் அருட்பணி விபின்சன், பங்குதந்தையர்கள் அருட்பணி ரிச்சர்ட், அருட்பணி பிரடி சாலமன், அருட்பணி கிளிட்டஸ், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் ரமேஷ் பாபு, நீரோடி ஜோஸ், பால்ராஜ், மீனவ பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கடலோர கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.