» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தள்ளுவண்டியில் ஆவின் பொருட்கள் விற்பனை திட்டம்: தொழில் முனைவோருக்கு அழைப்பு

செவ்வாய் 24, ஜனவரி 2023 5:04:05 PM (IST)

தள்ளுவண்டி, பேட்டரி தள்ளுவண்டி மூலமாக ஆவின் பொருட்களை  விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக விற்பனையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 

ஆவின் நிறுவனம் வாயிலாக பால் மட்டுமின்றி, 225-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் மோர், லஸ்ஸி, ஐஸ்கிரீம், நெய், இனிப்பு வகைகள் ஆகியவற்றை எல்லா தரப்பினரும் விரும்புகின்றனர். இந்த நிலையில் வரும் கோடைகாலத்தில் ஐஸ்கிரீம், மோர், லஸ்ஸி ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய ஆலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இவற்றை தள்ளுவண்டி, பேட்டரி தள்ளுவண்டி மூலமாக விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இது குறித்து ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குனர் ந.சுப்பையன் கூறியதாவது: தள்ளுவண்டிகள் மூலமாக ஐஸ்கிரீம் வகைகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்காக விற்பனையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதன்மூலம், புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்க உள்ளோம்.

மக்கள் இருக்கும் இடத்துக்கு நேரடியாக சென்று அவர்கள் விரும்பும் ஆவின் பொருட்களை வழங்க திட்டமிட்டு உள்ளோம். முதற்கட்டமாக சென்னை மற்றும் புறநகரைச் சேர்ந்த 100 புதிய தொழில் முனைவோருக்கு வாய்ப்பு வழங்க உள்ளோம். இந்த வாகனம் மூலமாக ஆவின் ஐஸ்கிரீம் உள்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்ய விரும்புவோர் ஆவின் நிர்வாகத்தை அணுகலாம் என்று கூறினார்.

ஆவின் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை தள்ளுவண்டிகள் மூலமாக விற்பனை செய்ய விரும்புவோர், சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதற்கான சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். விற்பனைக்கு எடுக்கும் பொருட்களின் மதிப்பை முன்பணமாக செலுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையாளர்கள் ரூ.10 ஆயிரம் காப்புத்தொகை செலுத்த வேண்டும். மாதம் ரூ.30 ஆயிரத்துக்கு குறையாமல் ஐஸ்கிரீம் எடுத்து, விற்பனை செய்ய வேண்டும். விற்பனையாளர்களுக்கு லாபம் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வழங்கப்படும். வங்கி கணக்கு மற்றும் குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களுடன் 2 அரசு அலுவலர்களால் சான்று அளிக்கப்பட்ட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். ஐஸ்கிரீம் விற்பனை செய்ய தேர்ந்தெடுக்கப்படும் பகுதிகள் மற்றும் இடங்கள் விண்ணப்பத்தில் முன்னதாகவே குறிப்பிட்டு அளிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

maaduJan 24, 2023 - 05:38:15 PM | Posted IP 162.1*****

paavam

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory